மதிய உணவுத் திட்டம்! ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்தி நெகிழ்ந்த பிட்டி தியாகராயர் குடும்பத்தினர்!
சென்னை: நீதிக்கட்சியின் முதன்மை தலைவராக திகழ்ந்து மறைந்த சர் பிட்டி தியாகராயரின் குடும்பத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
மதுரையில் கடந்த வாரம் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் பேசிய போது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 1922ஆம் ஆண்டு மதிய உணவுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பிட்டி தியாகராயர் பற்றியும் நினைவுகூர்ந்தார்.
பிட்டி தியாகராயரை பெருமைப்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதற்காக அவரது குடும்பத்தினர் நேரில் நன்றி கூறியிருக்கின்றனர்.

வெள்ளுடை வேந்தர்
திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு 1922-ஆம் ஆண்டு மதிய உணவை வழங்கினார். சுதந்திரத்துக்கு பிறகு காமராசர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தொடங்கி வைத்து முன் மாதிரி தலைவராக திகழ்ந்தார் பிட்டி தியாகராயர்.

மதிய உணவுத் திட்டம்
இதனிடையே இந்த மதிய உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இந்தியா விடுதலை அடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு நிதி நெருக்கடியைக் காரணமாகக் காட்டி ஆங்கிலேய அரசு நிறுத்தியது. அதற்குப் பிறகு 1955-ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் முதலமைச்சராக இருந்த நேரத்தில் மதிய உணவுத் திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி பிட்டி தியாகராயர் விதைத்த விதையை ஆலமர விழுதுகளை போல் பரப்பினார்.

பலரும் மறந்த வரலாறு
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் கடந்த 1922ஆம் ஆண்டே மதிய உணவுத் திட்டத்தை பிட்டி தியாகராயர் தொடங்கினார் என்ற வரலாறு காலப்போக்கில் மறைந்து போனது. இந்தச் சூழலில் கடந்த வாரம் மதுரையில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், சர் பிட்டி தியாகராயர் பெயரை குறிப்பிட்டு அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் பற்றி சிலாகித்து பேசினார்.

குடும்பத்தினர் நன்றி
இதனிடையே சர் பிட்டி தியாகராயரின் மகள் வழி பேத்தியான அமரா மற்றும் அவரது கணவர் வசந்தகுமார் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இதற்காக நன்றி தெரிவித்தனர். மேலும், பிட்டி தியாகராயர் பற்றி நூல் ஒன்றையும் முதல்வருக்கு பரிசாக அளித்தனர். திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவராக அறியப்படும் தியாகராயர் பெயரில் தான் சென்னையில் தி.நகர் என்ற பகுதி அழைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications