திண்டுக்கல் சிறுமி கலைவாணி படுகொலை வழக்கில் அரசு மேல்முறையீடு செய்க - ஸ்டாலின்
தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது என்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை: திண்டுக்கல் சிறுமி படுகொலை வழக்கில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்வதாகவும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடம் குரும்பட்டியில் முடிதிருத்தும் கடை நடத்தும் வெங்கடாசலம், லட்சுமி
தம்பதியரின் மகள் கலைவாணி. கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி கலைவாணியின் எதிர் வீட்டில் வசிக்கும் கிருபானந்தன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்ததோடு மயக்கமாக இருந்த சிறுமியை மின்சார வயரை மூக்கிலும் வாயிலும் செலுத்தி மின்சாரம் பாய்ச்சி படுகொலை செய்துள்ளார்.

வடமதுரை காவல்துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கிருபானந்தனைக் கைது செய்து சிறையில்
அடைத்தனர். திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த
செப்டம்பர் 29 வெளிவந்தது, சாட்சிகள் கலைக்கப்பட்டு கிருபானந்தன் குற்றவாளி என்பதற்கு போதிய ஆதாரம்
இல்லை என்று கூறி விடுதலை செய்யப்பட்டான்.
இந்த தீர்ப்பு கலைவாணியின் பெற்றோர்கள், உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சட்டத்தின்
பிடியிலிருந்து தப்பிவிடாமல் கொலையாளிக்குத் தூக்குத் தண்டனையோ, ஆயுள் தண்டனையோ கிடைக்கின்ற
வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் வலியுறுத்தி வருகின்றனர். அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை ஆகியிருக்கிறார். தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது! #JusticeForKalaivaniக்காக மேல்முறையீடு செய்க! என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க தமிழக அரசே மேல்முறையீடு செய்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications