6,000 திமுகவினருக்கு புத்தாடைகள்-ஹெல்மெட்! மீண்டும் வடசென்னை தொகுதி! கணக்கு போடும் கலாநிதி வீராசாமி!
வடசென்னை தொகுதி திமுகவினருக்கு புத்தாடைகள், ஹெல்மெட்கள் வாங்கிக் கொடுத்த ஆற்காடு வீராசாமி மகன்
சென்னை: வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6,000 திமுகவினருக்கு ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி புத்தாடைகளும், தலைக்கவசமும் வாங்கிக் கொடுத்துள்ளார் கலாநிதி வீராசாமி எம்.பி.
அது மட்டுமல்லாமல் தனது பெயரில் தனி செயலி ஒன்றையும் உதயநிதி ஸ்டாலினை வைத்து துவக்கி வைத்திருக்கிறார் கலாநிதி வீராசாமி எம்.பி.
கடந்த 4 ஆண்டுகளாக விட்டுவிட்டு இப்போது தனி செயலி, கட்சியினருக்கு புத்தாடைகள், ஹெல்மெட்கள் என கவனிப்பதன் பின்னணியில், கலாநிதி வீராசாமி மீண்டும் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருப்பது தெரிய வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் சிட்டிங் எம்.பி.க்கள் பலரும் மிகவும் சின்சியராக தொகுதிப் பணிகளை கவனித்து வருகின்றனர். கட்சியினரை குஷிபடுத்துவது, கட்சியினர் இல்லங்களில் நடைபெறும் நல்லது கெட்டது என அனைத்திலும் தலைகாட்டுவது, என பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பணிக்கான அஸ்திவாரத்தை போட தொடங்கிவிட்டனர். இதனிடையே வடசென்னை தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி கட்சியினரை செமையாக கவனித்து வருகிறார்.

6,000 திமுகவினர்
6,000 திமுகவினருக்கு தலைக்கவசம் வாங்கிக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு புத்தாடைகளும் வாங்கிக் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார். மேலும், தனது பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட செயலியை உதயநிதி ஸ்டாலினை அழைத்து வந்து துவக்கி வைத்துள்ளார் கலாநிதி. அந்த செயலியில் தனது தொகுதிப் பணிகள், இதுவரை என்னவெல்லாம் செய்யப்பட்டது, என்னென்ன பணிகள் செய்யப்பட்டு வருகிறது என்ற விவரத்தை இடம்பெறச் செய்துள்ளார்.

வட சென்னை தொகுதி
வட சென்னை தொகுதிக்குட்பட்ட மக்கள் அனைவரும் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே கலாநிதி வீராசாமி மீண்டும் வட சென்னை தொகுதியில் வரும் 2024 ஆம் ஆண்டு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தான் இப்போதே அதையொட்டிய பணிகளை அவர் ஆரம்பித்திருக்கிறார் எனக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற செயல்பாடுகள்
கலாநிதி வீராசாமியின் நாடாளுமன்ற செயல்பாடுகளை பொறுத்தவரை பெரியளவில் குறை கூற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத் தொடர்களில் முழுமையாக பங்கேற்பது, முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்புவது, வெளிநாட்டில் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை தாயகம் மீட்பது என தனக்குரிய கடமையை குறையின்றி செய்து வருகிறார் என்பது அவரது ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications