அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?.. டுவிட்டரில் உருகிய கமல்ஹாசன்!
சென்னை: அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?' என்று கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
இவர்களை விடுவிக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக எழுந்து வரும் கோரிக்கையாக இருந்து வருகிறது.

7 தமிழர்கள் விடுதலை
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 7 தமிழர்களின் விடுதலைக்கு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை எதிர்கொண்ட உச்சநீதிமன்றம் 7 பேரையும் தமிழ்நாடு அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என முக்கியமான செய்தியை கூறியது.

நழுவிய ஆளுநர்
இதனை தொடர்ந்து முந்தைய அதிமுக அரசு, எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஏற்க மறுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 'எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர்தான் உண்டு' என்று நழுவி சென்று விட்டார்.

குடியரசுத் தலைவரின் அமைதி
இதையடுத்து அ.தி.மு.க அரசு 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் ஜனாதிபதி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போதைய தி.மு.க அரசும் ஆட்சிக்கு வந்தது முதல் 7 தமிழர்கள் விடுதலைக்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியும் குடியரசுத் தலைவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
|
கமல்ஹாசன் உருக்கம்
இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் மகனின் விடுதலைக்காக போராடி வரும் அற்புதம் அம்மாள் குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் 'மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?' என்று கமல்ஹாசன் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications