கமல் வைத்த செக்.. ஸ்டாலின் செய்த நல்ல காரியம்.. கூட்டணியில் ஆண்டவரின் மாஸ்டர் பிளான் இதுதானா?
சென்னை: தமிழக அரசியல் களத்தில் ஒரு காலத்தில் மாற்று அரசியல் என்ற ஒற்றை முழக்கத்தோடு களம் இறங்கிய மக்கள் நீதி மய்யம், இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் கரங்களை வலுப்படுத்தும் நிலைக்கு வந்துள்ளது.. திருச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் திமுக கூட்டணியில் இணைந்ததற்கான பின்னணியை கமல்ஹாசன் வெளிப்படையாக உடைத்துள்ளார்.. "மகளிர் உரிமைத் தொகை" எனும் உன்னதத் திட்டம் தான் தன்னை இந்த முடிவை எடுக்கத் தூண்டியது என்பதே கமலின் வாதம்...!!
திருச்சி பிரச்சாரத்தில் கமல் பேசும்போது, "நான் சொன்ன ஒரு திட்டத்தை திமுக நிறைவேற்றியிருக்கிறது.. நாட்டில் வேறு யாருமே சொல்லாதது. மகளிர் உரிமைத் தொகை திட்டம். நல்ல ஐடியாவாக இருக்கிறதா? எங்கு இருந்து வந்தாலும் எடுத்துக்கலாம் என்று சொல்லும் பெருந்தன்மை இருக்கிறதா? அதுதான் 15 கட்சிகளையும் ஒருங்கிணைத்து, இன்று ஒரு கூட்டணியாக வைத்து இருக்க முடிகிறது. அந்த பெருந்தன்மையை பார்த்து தான் நானும் முடிவு செய்தேன். திமுக கூட்டணியில் இணைந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம்
கமல் சொன்னது நுற்றுக்கு நூறு உண்மை.. 2021 தேர்தலுக்கு முன்பே 'இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' என்ற திட்டத்தை கமல் தொடர்ந்து பேசினார்.. ஒரு புதிய கட்சியின் ஐடியாவை, பலமான ஒரு ஆளுங்கட்சி எடுத்துச் செயல்படுத்துவது என்பது கமலுக்குக் கிடைத்த ஒரு அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.. அந்த அங்கீகாரத்தை மதிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் சொல்வது, ஒரு அரசியல்வாதியாக அவரது பார்வையைத் தெளிவுபடுத்துகிறது.. தன் கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களோடு சேர்வது என்பது ஒரு வகை முதிர்ச்சிதான்..
இருந்தாலும், ஒரு கட்சியின் தலைவராக கமல் சொல்லும் இந்த ஒற்றைக் காரணம் அரசியல் ரீதியாக முழுமையானதா என்ற கேள்வியும் எழுகிறது.. ஒரு மாற்று அரசியலை முன்னெடுத்த தலைவர், வெறும் ஒரு திட்டத்திற்காக தனது தனித்துவ அடையாளத்தை விட்டுக்கொடுக்கலாமா என்ற விமர்சனம் அவர் மீது வைக்கப்படுகிறது..
கமலின் பிராக்டிக்கல் முடிவு
கடந்த தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட போது கிடைத்த வாக்கு சதவிகிதம், தனியாக நிற்பது எவ்வளவு சவாலானது என்பதை கமலுக்கு புரிய வைத்திருக்கும்.. அரசியலில் வெறும் கருத்தை சொல்வதோடு நின்றுவிடாமல், அதை செயல்படுத்தும் இடத்திற்கு அருகில் இருப்பது முக்கியம் என்று அவர் நினைத்திருக்கலாம்.. அந்த வகையில், திமுக கூட்டணியில் இணைந்தது என்பது தனது கட்சியின் நிலையை உறுதியாக வைத்திருக்க அவர் எடுத்த ஒரு பிராக்டிக்கல் முடிவு என்றே பார்க்கப்படுகிறது..
அதற்காக கமல்ஹாசனின் இந்த முடிவை வெறும் சமரசம் என்று மட்டும் ஒதுக்கிவிட முடியாது.. அரசியலில் பிடிவாதம் எப்போதும் வேலை செய்யாது.. தான் முன்வைத்த மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டுமென்றால், அதற்கு பெரிய கட்சிகளின் அமைப்பு தேவைப்படும் என்பதை கமல் புரிந்திருக்கிறார்.
திமுக & மநீம கூட்டணி
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக வந்தவர், இப்போது அதே கட்சியைப் பாராட்டுவது அவரது ஆரம்பகாலத் தொண்டர்களுக்கு சற்றே நெருடலாக இருக்கலாம்.. ஆனால் எதிர்த்து நின்று தோல்வி அடைவதை விட, இணைந்து இருந்து மாற்றத்தை உருவாக்கலாம் என்ற அணுகுமுறைக்கு அவர் மாறியிருக்கிறார் போலத் தெரிகிறது..
கமல் சொல்வதில் முழுக்க தவறும் இல்லை.. ஒரு தலைவர் முன்வைத்த யோசனையை, திமுக போன்ற பெரிய கட்சி எடுத்துச் செயல்படுத்தினால், அதை அங்கீகரித்து அந்த அணியுடன் சேர்வது அரசியல் ரீதியாக நியாயமான காரணம்தான்.. ஆனால் அதையே ஒரே காரணம் என்று சொல்வது கொஞ்சம் முழுமையாகத் தோன்றவில்லை.
பெருந்தன்மையான ஆண்டவர்
அரசியலில் கூட்டணி முடிவுகள் பொதுவாக வாக்கு கணக்கு, கட்சியின் நிலை, எதிர்கால வாய்ப்பு எனப் பல காரணங்களின் சேர்க்கையாகத்தான் அமையும்.. அந்த கோணத்தில் பார்த்தால், கமல் சொல்வது பாதி உண்மை; மீதியை அவர் சொல்லாமல் விட்டிருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்..
மொத்தத்தில், கமல்ஹாசன் இப்போது ஒரு லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், ஒரு நடைமுறை அரசியல்வாதியாகவும் பேசத் தொடங்கியிருக்கிறார்.. மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை பாராட்டுவது என்பது திமுகவிற்கு அவர் தரும் பாராட்டு மட்டுமல்ல, தனது கூட்டணி முடிவை நியாயப்படுத்தும் ஒரு வலுவான அரசியல் கேடயமாகவும் பார்க்கப்படுகிறது..
அதுமட்டுமல்ல, தான் முதன்முதலில் அறிவித்த திட்டத்தை, திமுக முன்னெடுத்ததை பாராட்டியிருப்பது, கமலின் மிகப்பெரிய பெருந்தன்மையையும் காட்டுகிறது.. எனினும், இது தேர்தல் களத்தில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications