விக்ரமன் பேச்சை வெட்டிய விஜய் டிவி.. “செக்” வைத்த கமல்ஹாசன்! “பெரியார்” பெயருடன் தொடங்கிய பிக்பாஸ்
சென்னை: நேற்று ஒளிபரப்பான சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரியார் பெயரோடு கமல்ஹாசன் பேசத் தொடங்கி இருக்கிறார். புதுக்கோட்டையில் அண்மையில் நிகழ்ந்த சாதிய கொடூரத்தை தொடர்ந்து நேரில் சென்று நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவை பாராட்டியபோது பெரியாரின் பெயரை உச்சரித்தார் கமல்ஹாசன்.
விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் 6 வது ஆண்டாக தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இன்னும் சில வாரங்களே உள்ளன. எனவே போட்டி முன்பை விட மேலும் கடினமாக மாறி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை பரப்பு செயலாளரான விக்ரமன் தொடர்ந்து முற்போக்கு கருத்துக்களையும், அம்பேத்கர், பெரியார் குறித்தும் பேசி வருகிறார்.
அதே தான்.. ஞாபகம் இருக்கா? சித்திரை முழுநிலவு விழா.. கட்சியினரை உற்சாகப்படுத்த அன்புமணியின் திட்டம்!
விக்ரமன் பேச்சு
கடந்த வாரம் சக போட்டியாளரான எடிகேவிடம் பேசிக்கொண்டு இருந்த விக்ரமன், "நானே சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பகுத்தறிய வேண்டும். அது சரியா? தவறா? என்று உங்கள் அறிவுக்கு எட்டியவரை பாருங்கள். சரியாக இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்." என்று தந்தை பெரியாரின் மிக முக்கிய கருத்தை மேற்கோள் காட்டினார்.
ஒளிபரப்பான விஜய் டிவி
அப்போது பெரியார் என்று விக்ரமன் உச்சரிக்கும் இடத்தில் அந்த பெயர் வராமல் மியூட் செய்யப்பட்டுவிட்டதாக வீடியோ பகிர்ந்து நெட்டிசன்கள் குற்றம் சாட்டினார். அதன் தொடர்ச்சியாக ப்ரீஸ் டாஸ்கில் கடந்த வாரம் வீட்டிற்கு வந்த அமுதவாணன் மகன் தந்தை பெரியார் போன்றே நடித்துக் காட்டியதையும் விஜய் டிவி ஒளிபரப்பவில்லை. ஆனால், 24 மணி நேரலையில் இது தெரிந்தது.
கமல் பேசிய புதுக்கோட்டை சம்பவம்
இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வந்த கமல்ஹாசன், "வேங்கைவயல் என்ற புதுக்கோட்டையை சேர்ந்த கிராமத்தில் 3 தலைமுறைகளாக தாங்கள் வணங்கும் தெய்வங்களை வணங்காமல், ஆலயத்தில் பிரவேசிக்க முடியாமல் ஒரு பட்டியலினத்து மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள்.
பெரியார் பெயர்
சில நாட்களுக்கு முன்பு அவர்கள் அந்த கோயிலில் சென்று தெய்வங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. காந்தியாரும், பெரியாரும் என்றோ செய்த ஆலய பிரவேசம் இன்று செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. அதை செய்து முடித்த ஆட்சியர் கவிதா ராமு அவர்களுக்கும் எஸ்பி வந்திதா அவர்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டிய நாள் இது.
ஆட்சியர், எஸ்பிக்கு வாழ்த்து
இந்த வருட கடைசியில் இருக்கும் நாம் தமிழர்களாக இனி இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் இருக்க சத்தியம் செய்வோம். இன்னும் கவிதா ராமு, வந்திதா போன்ற வீரமங்கையர் தமிழகம் எங்கும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். பாரதியின் புதுமை பெண்கள் இதோ என்று சொல்லிக்கொண்டு நிற்கும் அவ்விருவருக்கும் நம் வாழ்த்துக்கள்." என்றார்.
புதுக்கோட்டையில் நடந்தது என்ன?
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு அருகே இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் நீர்தேக்க தொட்டியில் மலம் கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய சென்ற மாவட்ட ஆட்சியரிடம் தலித் மக்கள் இரட்டை குவளை முறை தொடர்வதாகவும் கோயிலுக்குள் அனுமதி மறுப்பதாகவும் புகாரளித்தனர். இது தொடர்பாக சாமியாடிய பெண் உட்பட 4 பேர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.