காமராஜர் பெயர் அகற்றம்... சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்ட நாடார் சங்கத்தினர் - திடீர் பரபரப்பு
சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த காமராஜர் பெயர் பலகை நீக்கப்பட்டதால் தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் விமான நிலையத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திற்கு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்த 'சென்னை காமராஜர் உள்நாட்டு விமான நிலையம்' என்கிற பெயர் பலகை அகற்றப்பட்டது.

தற்காலிகமாகவே இந்த பெயர் பலகையை அகற்றுவதாகவும் விரிவாக்கப் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் காமராஜர் பெயர் பலகை வைக்கப்படும் என சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இன்னும் காமராஜர் பெயர் பலகை வைக்கப்படவில்லை எனக்கூறி தமிழ்நாடு நாடார் சங்கத்தினர் சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காமராஜர் பெயர் பலகையும் அவரது உருவப்படத்தையும் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள் சென்னை விமான நிலைய ஆணையத்தின் இயக்குனர் சரத்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களிடம் சென்னை விமானநிலைய இயக்குனர் சரத்குமார், விரைவில் காமராஜரின் பெயர் பலகையும், படத்தையும் வைப்பதாக உறுதி அளித்தார். இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ் நாடார், "எங்கள் கோரிக்கையை விமான நிலைய அதிகாரிகளும், மத்திய அரசும் நிறைவேற்றவில்லை என்றால் ஏப்ரல் 20 ஆம் தேதி சென்னையில் அனைத்து நாடார் சங்கங்களும் ஒன்றிணைந்து மாபெரும் உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்துவோம்." என எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications