ஜெயலலிதா தைரியசாலி.. இதை ஒத்துக்க எனக்கு தயக்கம் இல்லை.. கனிமொழி பேச்சால் புருவத்தை உயர்த்திய அதிமுக
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவும் முன்னாள் அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜும் தைரியமான பெண்மணிகள் என ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
நாடாளுமன்றச் சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் நடைபெறும் கூட்டத் தொடரில் முதல் மசோதாவாக பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கலானது.

அதாவது லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி லோக்சபாவின் மொத்த உறுப்பினர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே பெண்களாக உள்ளனர். அதே நேரத்தில் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் சுமார் 27 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் தாக்கலானது. இந்த இடஒதுக்கீடானது வரும் 2024 லோக்சபா தேர்தலில் வருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது .இதனால் இது 2029 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் இந்த மசோதா மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசியிருந்தார். அதன் பிறகு திமுக எம்பியும் துணை பொதுச் செயலாளருமான கனிமொழி பேசினார். அவர் பேசுகையில் பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி. என்று மகாகவி பாரதியாரின் கவிதையை மேற்கோள்கட்டி, மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி உரையாற்றினார்.
அவர் மேலும் பேசுகையில் இந்த நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நான் பலமுறை கொண்டு வந்துள்ளேன். நான் ஒவ்வொரு முறையும் இந்த மசோதா குறித்து கேட்கும் போதெல்லாம் அரசு ஒரே பதிலைத்தான் சொல்லி வந்தது. அதாவது இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன் அனைத்து அரசியல் கட்சியினரிடமும் ஒருமித்த கருத்தை கட்டமைக்க வேண்டும் என சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
என்ன மாதிரியான ஒரு மித்த கருத்தை உருவாக்கினீர்கள் என்பதை நான் இப்போது அறிய விழைகிறேன். இந்த மசோதா மிகவும் ரகசியமாக கொண்டு வரப்பட்டது. இந்த கூட்டத் தொடர் எதற்காக கூட்டப்பட்டது என்பது கூட எங்களுக்கு தெரியாது. 1996ஆம்ஆண்டு முதல் இந்த மசோதா குறித்து பேசி வருகிறோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் பேசினேன், இப்போது பேசி வரும் நிலையே இருந்தது.
பெண்கள் தைரியமானவர்கள், ஏன் சுதந்திர போராட்டத்திலும் போர்களிலும் பெண்கள் கலந்து கொண்டு பார்த்ததில்லையா, அரசியலில் தைரியமான பெண்ணாக இந்திரா காந்தி இருந்ததில்லையா என கேள்வி எழுப்பினார் கனிமொழி. அப்போது ஜெயலலிதா என உறுப்பினர்கள் சிலர் கூச்சலிட்டனர். அதற்கு கனிமொழி, ஜெயலலிதாவும் தைரியமான பெண் தலைவர் என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை,
அவர் மட்டுமில்லை மம்தா பானர்ஜி, சுஷ்மா ஸ்வராஜ், சோனியா காந்தி உள்ளிட்டோரும் தைரியமான பெண்கள்தான் என கனிமொழி குறிப்பிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications