கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்?
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி ராஜினாமா செய்தால் திமுகவுக்கு 2 ராஜ்யசபா எம்.பி.க்கள் கூடுதலாக கிடைக்கும். இந்த இடங்களுக்கு தேர்தலில் தோற்ற கார்த்திகேய சிவசேனாபதி, தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாய்ப்புகள் அதிகம் என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.
அதிமுகவின் மிக முக்கியமான 2-ம் கட்ட தலைவர்கள் கேபி முனுசாமி, வைத்திலிங்கம். இருவரும் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டாலும் மாநில அரசியலில்தான் இவர்களுக்கு ஈடுபாடு.
வெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு
அமைச்சர் கனவில் போட்டி
அதனாலேயே சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். அதிமுக வென்றிருந்தால் நிச்சயம் இருவருக்குமே அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கும். தற்போது அதிமுக கூட்டணி தோல்வியை தழுவியுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைய உள்ளது.
எம்.பி. பதவி ராஜினாமாவா?
இந்த நிலையில் வைத்திலிங்கமும் கேபி முனுசாமியும் அடுத்து என்ன செய்வார்கள்? என்கிற கேள்வி எழுந்தது. இருவரும் எம்.எல்.ஏ.வாக நீடிக்க விரும்பினால் ராஜ்யசபா எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அப்படி ராஜினாமா செய்தால் தற்போதைய எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் திமுக அணிக்குதான் 2 எம்.பிக்கள் கிடைக்கும்.
கார்த்திகேய சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்
திமுகவைப் பொறுத்தவரை இந்த தேர்தலில் சவாலான வேட்பாளர்களாக களம் கண்டவர்கள் கார்த்திகேய சிவசேனாபதியும் தங்க தமிழ்ச்செல்வனும்தான். துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸை எதிர்த்து தங்க தமிழ்ச் செல்வனும், அமைச்சர் வேலுமணியை எதிர்த்து கார்த்திகேய சேனாபதியும் போட்டியிட்டனர். ஓபிஎஸ்ஸை கடைசி நிமிடம் வரை கதிகலங்க வைத்திருந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அதேபோல் வேலுமணிக்கு டப் ஃபைட் கொடுத்தவர் கார்த்திகேய சேனாபதி.
திமுக அறிவிக்க வாய்ப்பு?
ஆகையால் இருவருக்கும் உரிய மரியாதை அளிக்கும் வகையில் அதிமுகவின் கேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால் அந்த எம்பி பதவிகளுக்கு இந்த இருவரையும் திமுக நிறுத்தும் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள். கேபி முனுசாமி, வைத்திலிங்கத்தின் முடிவு வெளியான உடனேயே திமுக இந்த அறிவிப்பை வெளியிடும் எனவும் கூறப்படுகிறது.