அயிரை மீன் அளவுக்கு பேசு... சட்டப்பேரவையில் கருணாநிதியின் சாதுர்ய பேச்சும்.. நகைச்சுவை நயமும்..!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் இன்று திறக்கப்படுகிறது.
தனது சாதுர்யமான பேச்சாலும், நகைச்சுவை நயத்தாலும் எப்போதும் அவையை கலகலவென வைத்துக்கொள்ளும் திறமையை பெற்றிருந்தவர் கருணாநிதி.
சட்டப்பேரவையில் கருணாநிதி கையாண்ட சொல்லாடல்கள் எல்லாமே எதிர்க்கட்சியினரை சிரிக்க வைக்கும் வகையிலேயே அமையும்.
அது குறித்த ஒரு சிறிய தொகுப்பு இதோ;
சட்டசபையில் கருணாநிதி படத்திறப்பு... புன்னகை பொழியும் பொன்னோவியம் என வைரமுத்து புகழாரம்
அயிரை மீன்
கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமி சட்டமன்றத்தில் பேச எழுந்தபோது, வழக்கம் போல் முதலமைச்சரை புகழ்ந்து கொண்டிருந்தார். இதை கவனித்த கருணாநிதி சுருங்க பேச வேண்டும் என்பதை ''அயிரை மீன் அளவுக்கு பேசு'' என்று துண்டு சீட்டு கொடுத்து அனுப்பினார். இதைப்பார்த்த அப்போதைய அமைச்சர் கே.பி.பி.சாமி அடுத்த நொடியே தனது உரையை முடித்துக்கொண்டார்.
சாதுர்யம்
இதேபோல் சட்டப்பேரவையில் நடந்த மற்றொரு விவாதத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் செல்ல உரிமையில்லையே என கருணாநிதி பேசிக்கொண்டிருந்த போது, கோயிலுக்கே செல்லாத கருணாநிதிக்கு இதை பற்றி ஏன் கவலை என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனந்தநாயகி வினவினார். இதற்கு ஆன் தி ஸ்பாட்டில் சாதுர்யமாக பதில் அளித்த கருணாநிதி, கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்கு போகிறார்கள், வாதாடுபவர்களும் தானே கோர்ட்டுக்கு போகிறார்கள் என்றார்.
சொத்து மதிப்பு
காமாட்சி என்ற பெண் எம்.எல்.ஏ. கேள்வி நேரத்தின் போது மதுரை மீனாட்சியின் வைர அட்டிகை, வைர கிரீடம், உள்ளிட்ட இன்னும் பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா என வினவினார். இதற்கு சமயோசிதமாக பதிலளித்த கருணாநிதி, மீனாட்சிக்கு இருக்கும் சொத்து மதிப்பை கூறினால் காமாட்சிக்கு பொறாமை ஏற்படாதா எனக் கேட்டு அவையில் சிரிப்பொலியை உருவாக்கினார்.
பெரிய நன்மை
இதேபோல் ''நான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தொடர்ந்து நன்மை செய்வேன் என ஜெயலலிதா கூறியது பற்றி கருத்து தெரிவித்த கருணாநிதி, ''அம்மையார் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே மக்களுக்கு செய்யும் பெரிய நன்மை தான் '' எனத் தெரிவித்து தனது சாதுர்யத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விழா மேடை
பிரச்சார மேடைகளாக இருந்தாலும் சரி, சட்டப்பேரவை விவாதங்களாக இருந்தாலும் சரி கருணாநிதியிடம் இருந்து வெளிப்படும் சிலேடைகளை அவரது எதிரிகள் கூட ரசிப்பார்கள். அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக, தனது முதல் தேர்தல் முதல் இறுதி தேர்தல் வரை போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பேரவைக்குள் சென்றவர். இதனிடையே அவரது உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைக்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.