இந்தியா என்ற கொள்கையை அழிக்கும் முயற்சியை அனுமதிக்க மாட்டோம்.. ராகுல் காந்தி ஆவேசம்
சென்னை: இந்தியா என்ற கொள்கையை அழிக்கும் முயற்சியை நாம் ஏற்கப்போவதில்லை. நமது உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி தேர்தல் ஆணையம் போன்ற உச்சபட்ச நிறுவனங்களை அழித்து ஒழிப்பதை நாம் அனுமதிக்க கூடாது, என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கருணாநிதி சிலை திறப்பையடுத்து சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
கருணாநிதி சாதாரண அரசியல்வாதி இல்லை. கருணாநிதி தமிழ் மக்கள் குரலாக இருந்தார். தமிழக மக்களின் கஷ்டத்தை தனது கஷ்டமாக நினைத்தவர் கருணாநிதி. தமிழக மக்கள் மகிழ்ச்சியை தனது மகிழ்ச்சியாக நினைத்தார். கருணாநிதி வாழ்க்கையை எடுத்து பார்த்தால் தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்தவர்.
கருணாநிதியுன் நான் கடைசியாக நடத்திய 2வது சந்திப்பை நினைவுகூருகிறேன். கருணாநிதி வீட்டுக்கு முதல் முறையாக அப்போதுதான் சென்றேன். அவரது வீடு பெரிதாக இருக்கும், பெரிய பொருட்கள் இருக்கும் என நினைத்து சென்றேன். நான் வீட்டுக்குள்ளே போனபோது, அவரது எளிமையை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன்.
பல ஆண்டுகளாக பதவியில் இருந்தபோதும், தமிழகத்தின் முதல்வராக மீண்டும், மீண்டும் பதவிக்கு வந்தபிறகும் கருணாநிதியிடம் ஆணவம் இல்லை. இது இளம் அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடம். எனக்கு அது உந்துதலாக இருந்தது. எனவே எனக்கு வழி காட்டியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போதுள்ள அரசாங்கம் ஒரு கொள்கைதான், நாட்டில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. கோடானகோடி மக்கள் கருத்தை மதிக்க வேண்டியதில்லை என்று இந்த அரசு நினைக்கிறது. பல மொழிகள், கலாச்சாரத்தை மதிக்க கூடாது என்று இப்போதுள்ள அரசு நினைக்கிறது. கருணாநிதியை நினைவில் கொண்டு, நாடு முழுக்க உள்ள மக்களின் ஒற்றுமையை உறுதி செய்து பாஜக அரசை அகற்ற வேண்டும்.
இந்தியா என்ற கொள்கையை அழிக்கும் முயற்சியை நாம் ஏற்கப்போவதில்லை. நமது உச்ச நீதிமன்றம், ரிசர்வ் வங்கி தேர்தல் ஆணையம் போன்ற உச்சபட்ச நிறுவனங்களை அழித்து ஒழிப்பதை நாம் அனுமதிக்க கூடாது. நான் இணைந்து நின்று இதை சாதிக்க வேண்டும். தமிழக மக்கள் எத்தனை வயதுடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு, நான் நன்றி கூற விரும்புகிறேன். காரணம், இந்த நாட்டுக்கு வழிகாட்டுதல்களை அளிக்கிறார்கள். உலகத்திற்கான பார்வையை தமிழக மக்கள் வழங்குகிறார்கள். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.