சசிகலாவை சந்திக்க முடிவெடுத்த இரண்டு எம்எல்ஏக்கள்.. அதிர்ச்சியில் அதிமுக!
சென்னை 4 வருடத்திற்கு பிறகு சென்னை திரும்பியுள்ள சசிகலாவை அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் கருணாஸ் மற்றும் தனியரசு சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சசிகலாவிற்கு ஆதரவாக செல்லும் அதிமுகவினரை அடுத்தடுத்து நீக்கி வரும் மேலிடம் இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதை தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் உறுதி செய்யவில்லை.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து சசிகலா, கடந்த 8ம் தேதி சென்னைக்கு திரும்பினார். பெங்களூரில் இருந்து சென்னை வரை அவருக்கு அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
23 மணி நேர பயணம்
பெங்களூருவில் காலை 8 மணிக்கு தொடங்கிய சசிகலாவின் சென்னை பயணம் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 23 மணி நேரம் சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை வர நேரம் எடுத்தது. அந்த அளவிற்கு சசிகலாவின் ஆதரவாளர்கள் மிக நீண்ட வரவேற்பு அளித்தனர். அமமுகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர்.
சசிகலா பேச்சு
சென்னை வந்த சசிகலா அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு திமுக என்ற பொது எதிரியை வீழ்த்த வேண்டும் என்று பேசினார். அவர் முதல்வர் எடப்பாடி குறித்தோ அல்லது துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் குறித்தோ எதுவும் பேசவில்லை. அனைவரும் ஒன்றுபடுவோம் என்ற ரீதியில் தான் கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்,
சசிகலாவுக்கு இடமில்லை
ஆனால் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது இல்லை என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதிமுகவில் உள்ள அமைச்சர்களும் இதே கருத்தையே வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன் மீது கடுமையான விமர்சனங்களை முதல்வரும், அமைச்சர்களும் வைத்து வருகிறார்கள்.
ரகசிய ஆதரவு
இது ஒருபுறம் எனில் சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பு உள்ளது. சசிகலா ஓய்வில் இருந்த போதே 10 அதிமுக எம்.எல்.ஏக்கள் ரகசியமாக சந்தித்து தங்களின் ஆதரவையும் தந்ததாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவியது. அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
சசிகலாவை சந்திக்க முடிவு
ஆனால், சென்னை திரும்பிய சசிகலாவை இதுவரை அமைச்சர்களோ எம்.எல்.ஏக்களோ நேரடியாக சந்திக்கவில்லை. ஒருசில முக்கிய நிர்வாகிகள் தொலைபேசி மூலம் மட்டுமே பேசியதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், கருணாஸ் மற்றும் தனியரசு எம்.எல்.ஏக்கள் சசிகலாவை அடுத்த வாரம் சந்திக்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது.. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாகவும், சசிகலாவின் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்கானதாகவும் இருக்கும் என சசிகலா ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.