கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி!
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ அனுப்பிய சம்மன் அடிப்படையில் மார்ச் 17ஆம் தேதி நேரில் சென்று விளக்கம் அளிக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் முடிந்து 3 நாட்களுக்கு பின் தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டு திமுகவை சாடியதோடு, முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விடுத்தார்.

அதேபோல் கரூர் சம்பவத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியே காரணம் என்று தவெகவினர் பலரும் சோசியல் மீடியாவில் வதந்திகளை பரப்ப தொடங்கினர். இதன்பின் வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் கரூர் திமுக அலுவலகத்தில் செந்தில் பாலாஜி, வீடியோ ஆதாரங்களுடன் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.
இதன்பின் கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் 2 நாட்கள் விசாரணைக்கு ஆஜராகினர். அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் 2 முறை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார்.
மார்ச் 10ஆம் தேதியான இன்றும் சிபிஐ தரப்பில் விசாரணைக்கு அஜராக விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தேர்தல் பணிகள் காரணமாக விஜய் விலக்கு கோரி இருக்கிறார். இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ தரப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில் சிபிஐ சம்மன் தொடர்பாக செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் செந்தில் பாலாஜி, கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications