விதிகளுக்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை விடுதலை செய்க... ராமதாஸ் அறிக்கை
சென்னை: விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜிவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தடைவிதிக்க முடியாது என்றும், இவ்விஷயத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் 7 தமிழர்களின் விடுதலைக்கு எதிரான அனைத்துத் தடைகளும் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளன.
7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் 243 நாட்கள் ஆகி விட்டன. இதுபற்றி பல்வேறு கட்டங்களில் வினா எழுப்பப்பட்ட போதெல்லாம், ஆளுநர் மாளிகைத் தரப்பில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் தெரிவிக்கப்பட்ட காரணம், 7 தமிழர் விடுதலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது தான். அந்த வழக்கு இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், 7 தமிழர் விடுதலைக்கு தடையில்லை.
நடப்பது ஜெயலலிதா ஆட்சியா... மக்களை ஏமாற்றுகிறார் பழனிசாமி... டிடிவி காட்டம்
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் போது பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முதன்மையானது 7 தமிழர்கள் விடுதலை ஆகும். இந்த கோரிக்கையை கடந்த மார்ச் 6-ம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வலியுறுத்தியதுடன், மனுவாகவும் அளித்தேன். அதன்பின்னர் 7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் குறிப்பிட்டத்தக்க அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தாமதிப்பது முறையல்ல
அத்துடன் இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூடுதல் முன்னேற்றமாக அமைந்திருக்கிறது. இந்தத் தீர்ப்பின் பயனாக 7 தமிழர்களின் விடுதலை கண்ணுக்கு எட்டிய தொலைவில் தெரிகிறது.7 தமிழர்கள் விடுதலைக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து 8 மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில் அவர்களின் விடுதலையை ஆளுநர் இனியும் தாமதிப்பது முறையல்ல.
கருணை காட்டுங்கள்
அரசின் பரிந்துரை மீது ஆளுனர் முடிவெடுக்க அரசியல் சட்டத்தில் கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதைக் காரணம் காட்டி 7 தமிழர் விடுதலையை தாமதப்படுத்தக் கூடாது. விதிகளை கடைபிடிப்பதற்கு பதிலாக கருணையைக் கடைபிடித்து 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
விடுதலைக் காற்று
ஆளுநர் தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் 7 தமிழர்கள் தங்களின் ஒரு நாள் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதால் அடுத்த சில நாட்களில் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கவும், இயல்பான வாழ்க்கையை வாழவும் ஆளுநர் புரோகித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.