கிஷோர் சாமி, மாரிதாஸ் ஒரே நாளில் சிறையிலிருந்து விடுதலை
சென்னை: ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூட்யூபர் மாரிதாஸ் மற்றும், பெரியார், திராவிட அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து பதிவிட்ட வழக்ககில் சிறையில் இருந்த கிஷோர் கே சாமி ஆகியோர் இன்று ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்த பாஜக ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ், குன்னூர் அருகே ஹெலிகாப்டரில் சென்ற முப்படை தலைமை தளபதி பிவின் ராவத் விபத்தில் மரணம் அடைந்தது தொடர்பாக, தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டதாக போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிறுவனம் அனுப்பியது போல் போலி மின்அஞ்சல் அனுப்பியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நெல்லை மேலபாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர், இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸை பரப்புவதாகவும், முஸ்லீம் மக்களிடையே வெறுப்பை தூண்டும்வித்த்தில் கருத்துக்களை வெளியிடும் மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

மரிதாஸ் மீதான வழக்குகள் ரத்து
இனையடுத்து மேலபாளையம் போலீசார் மாரிதாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாரிதாஸ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகளில் இரு வழக்குகளில் அடுத்தடுத்து இரண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், போலி ஈமெயில் விவகாரத்தில் மாரிதாசுக்கு ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட மாரிதாஸ் இன்று வெளியில் வந்தார்.

கிஷோர் கே சாமி மீது புகார்
இதேபோல் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ஜூன் 10-ம் தேதி புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு
அதனடிப்படையில் 153 - கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1) ( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தைச் செய்யத் தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராகக் குற்றம் செய்யத் தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் கிஷோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்தது. இதனையடுத்து கிஷோர் கே. சாமியை ஜூன் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில்வைக்க, தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் சைதாப்பேட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டம் ரத்து
தொடந்து கிஷோர் கே சாமி மீது அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவரை குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்படுவதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இந்த நிலையில் தன் மீதான விதிக்கப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் கிஷோர் கே சுவாமி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுவை விசாரித்த நீதிமன்றம் கிஷோர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து இன்று சிறையிலிருந்து கிஷோர் கே சுவாமி விடுதலை செய்யப்பட்டார்.

ஒரே நாளில் விடுதலை
இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவின் உள்ளிட்ட பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கொண்டாடி வருகின்றானர். பல்வேறு வழக்குகளில் , வெவ்வேறு காலை இடைவெளியில் கைது செய்யப்பட்டிருந்தாலும், வலதுசாரி சிந்தனை கொண்ட மற்றும் பாஜக ஆதரவாளர்களான மாரிதாஸ் மற்றும் கிஷோர் கே சாமி ஆகியோர் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் பகுதியில் அமைந்துள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்ட இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், சுவாமி தரிசனம் செய்த பிறகு யூட்யூபர் மாரிதாஸ், திமுக எதிர்ப்பாளர் கிஷோர் கே ஸ்வாமி, முகநூல் பதிவாளர் பிபின்குமார் ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் இருந்து பிணை வழங்கப்பட்டிருப்பதை கொண்டாடும் விதமாக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் வழிபாடு செய்ததாக கூறினார்.












Click it and Unblock the Notifications