உண்மையான குற்றவாளி? நீதிமன்றம் சொன்ன ஒரு வார்த்தை.. கோடநாடு வழக்கில் போலீசுக்கு ரூட் கிளியர்
சென்னை: கோடநாடு வழக்கில் மேலதிக விசாரணை நடத்துவதற்கு போலீசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் இனி இந்த வழக்கில் தமிழ்நாடு போலீஸ் யாரை வேண்டுமானாலும் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த 60 நாட்கள் கோடநாடு வழக்கில் பல திருப்பங்களை எதிர்ப்பார்க்கலாம்.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலதிக விசாரணைசெய்ய எதிர்ப்பு தெரிவித்து இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் கோவையை சேர்ந்த ரவி என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். அதில், கோடநாடு வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இப்போது போய் மீண்டும் விசாரணை நடத்துவது என்ன நியாயம்.
போலீஸ் மீண்டும் கூடுதலா விசாரிக்க கூடாது. போலீஸ் என்னை வாக்குமூலம் கொடுக்க அழைக்கிறார்கள். இதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில்தான், கோடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்க, விரிவுபடுத்த போலீசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு
இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம் முக்கியமான ஒரு விஷயத்தை தெரிவித்துள்ளது. நீதிபதி நிர்மல்குமார் தனது தீர்ப்பில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம். வழக்கு தொடர்ந்தவர் குற்றவாளியோ புகார்தாரரோ அல்ல; சாட்சி மட்டுமே.வழக்கின் எந்த கட்டத்திலும் விசாரணையை விரிவுபடுத்த முடியும். வழக்கு விசாரணையை தாமதபடுத்தினாலும் உண்மையை கண்டறிவதில் உதவியாக இருக்கும். தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களையும், விவரங்களையும் வைத்து பாரபட்சமற்ற விசாரணையை தொடர எவ்வித தடையும் இல்லை, என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான குற்றவாளி
அதாவது தேவைப்பட்டால் தமிழ்நாடு போலீஸ் எந்த ஒரு வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க மேல் விசாரணை நடத்தலாம் என்ற வார்த்தையை நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போது கோடநாடு வழக்கில் தமிழ்நாடு போலீஸ் ரூட் கிளியர் ஆகியுள்ளது. உயர் நீதிமன்றமே வழக்கில் மறுவிசாரணை நடத்த அனுமதி அளித்துவிட்டதால் இனி யாருக்கு சம்மன் அனுப்பி போலீஸ் மீண்டும் விசாரணையை ஆரம்பத்தில் இருந்து நடத்த முடியும். முழு ரகசியத்தை கொண்டு வரும் வரையில் விசாரணை நடத்தலாம்.

மூன்று பேர்
ஏற்கனவே சயான், மனோஜ், தனபால் ஆகியோரிடம் போலீசார் மறுவிசாரணை நடத்தி, வாக்குமூலம் வாங்கிவிட்டனர். இவர்களிடம் வரும் நாட்களில் கூடுதல் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் போது தற்போது உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் அனுமதி தமிழ்நாடு போலீசுக்கு பெரிய கிரீன் சிக்னலாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் கோவை ரவி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. தற்போது அவரின் மனு தள்ளுபடி ஆகியுள்ளதால் மேற்கொண்டு அவருக்கு போலீஸ் சம்மன் அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடமும் வாக்குமூலம் வாங்கப்படும்.

சம்மன்
அதோடு இன்று ஊட்டி கோர்ட்டில் போலீஸ் புதிய வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை. சென்னை ஹைகோர்ட்டில் ரவி தொடுத்த வழக்கு காரணமாக, கூடுதல் வாக்குமூலம் தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடக்கவில்லை. செப்டம்பர் 2ம் தேதிதான் இந்த விசாரணை ஊட்டி கோர்ட்டில் மீண்டும் நடக்கும். அப்போது தமிழ்நாடு போலீஸ் எந்த தடையும் இன்றி புதிய வாக்குமூலங்களை ஊட்டி கோர்ட்டில் சமர்ப்பிக்க முடியும். புதிய விவரங்களை தாக்கல் செய்ய முடியும்.

தாக்கல்
போலீஸ் இனி தடங்கல் இன்றி மேற்கொண்டு விசாரிக்க முடியும். இப்போது வரை சயான், தனபால் கொடுத்த வாக்குமூலங்கள் என்ன என்று தெரியவில்லை. இன்று ஊட்டி கோர்ட் விசாரணையை நடக்காததால் அதன் விவரம் வெளியாகவில்லை. தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியால் சயான் கொடுத்த மறு வாக்குமூல விவரங்களை ஊட்டி கோர்ட் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அப்போது பல பூதங்கள், மர்மங்கள் வெளியே வரும். அடுத்த வாரம் வியாழக்கிழமை ஊட்டி கோர்ட்டில் இதனால் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications