வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு- தமிழக அரசு அப்பீல் செய்வதை கைவிட கொங்கு மக்கள் முன்னணி வலியுறுத்தல்
சென்னை: வன்னியருக்கான 10.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்று கொங்கு மக்கள் முன்னணியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.ஆறுமுகம் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சி.ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அவசரகதியாக தமிழக அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் 140 பிரிவினரும், மிகப் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் சமுதாயத்தில் 115 பிரிவினர் என, மொத்தமாக 255 சமுதாயங்களை சேர்ந்த இளையோரின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

4 மேல்முறையீடு வழக்குகள்
இதை அறிந்தே நீதிமன்றம் நியாயமான தீர்ப்பை வழங்கியது. தமிழக அரசு தற்போது நீதிமன்றம் வழங்கிய நியாயத்தை ஏற்க மறுப்பது 255 சமூக பிரிவில் உள்ள இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கத் துடிக்கிற செயலாக உணர்கிறோம். இது சமூகநீதிக்கு எதிரான செயலாகும். ஒரே ஒரு சமுதாயத்திற்காக 255 சமுதாயங்களுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் நான்கு மேல்முறையீடு வழக்குகளை நான்கு அனுபவ முதிர்ச்சி கொண்ட வழக்குரைஞர்களை கொண்டு கோடிக்கணக்கில் மக்களின் வரிப் பணத்தைச் செலவழித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்காடுகிறீர்கள்.

தவறான முன்னுதாரணம்
மேலும் ஒரு சமூகம் வன்முறையை கையிலெடுத்து போராட துவங்கினாலே அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கலாம், அதிகப்படுத்தலாம் என்ற நிலையை அரசு ஏற்று கொண்டு விட்டால் அது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணத்திற்கு வழி வகுத்துவிடும். எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதும். போராடமலும், அமைதி வழியில் கோரிக்கை வைக்கின்ற சமூகங்களுக்கும் இது போன்ற அரசின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு
அரசு முறையாக சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்த சமுதாயத்தினர் கல்வி அரசு வேலைவாய்ப்புகள் பயன் அடைந்து பற்றி கணக்கெடுத்து அதன் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதே கொங்கு மக்கள் முன்னணியின் நிலைப்பாடும், கோரிக்கையுமாகும்! இதுவே முழுமையான சமூக நீதியும் ஆகும். இதை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னெடுத்தால் வரலாற்றில் அவரது பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.

அப்பீல் கூடாது
மேலும் இட ஒதுக்கீட்டை வன்முறை, வெறியாட்டங்களுக்கு அஞ்சி ஒதுக்கீடு செய்தால் பல சமூகத்தை வஞ்சிக்கும் செயலாகவே அமையும். எனவே தமிழக அரசு மேல் முறையீடு செய்யும் நடவடிக்கையை உரிய பரிசீலனை செய்து கைவிட வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி கோரிக்கை வைக்கிறது. சமூகவாரியான கணக்கெடுப்பை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்வதோடு அதில் வன்னியர் சமூகத்திற்கு உரிய இடஒதுக்கீடை வழங்க முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு சி.ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications