கொங்கு மண்டலம் படைத்த வரலாறு.. கரூர் 92%! கோட்டையை பிடிப்பது உதயசூரியனா? இரட்டை இலையா? அல்லது "அவரா"
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், 2026 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலம் 92.63% வாக்குப்பதிவுடன் புதிய உச்சத்தைத் தொட்டு ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்துள்ளது. இதனால் எந்த கட்சிக்கு பாதிப்பு? அதிமுக, திமுக இருவரில் யாருக்கு கொங்கு கிடைக்கப்போகிறது? விஜய்யின் வருகை பாதிப்பை தருமா? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனமும் இப்போது மேற்கு மாவட்டங்களை நோக்கியே திரும்பியுள்ளது.

தமிழகத்தை வடக்கு, தெற்கு, டெல்டா மற்றும் கொங்கு என 4 பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தால், இந்த முறை கொங்கு மண்டலம் மற்ற அனைத்து மண்டலங்களையும் பின்னுக்குத் தள்ளி, வாக்குப்பதிவு எண்ணிக்கையிலும் சதவீதத்திலும் ரெக்கார்டு படைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET ஆப் வெளியிட்டுள்ள தரவுகள், வாக்காளர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளன.
டாப் இடத்தில் கரூர்
கொங்கு மண்டலத்தில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை வாக்குப்பதிவு சதவீதம் எகிறியுள்ளது. குறிப்பாக, கரூர் மாவட்டம் 92.63% வாக்குப்பதிவை எட்டி மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளது... சேலம்: மாவட்ட சராசரி 90.76%. சங்ககிரியில் அதிகபட்சமாக 92.53% வாக்குகளும், சேலம் வடக்கில் குறைந்தபட்சமாக 87.40% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஈரோடு மாவட்ட சராசரி 90.10%. பெருந்துறையில் அதிகபட்சமாக 92.47% மற்றும் ஈரோடு மேற்கில் குறைந்தபட்சமாக 87.95% வாக்குகள் பதிவாகியுள்ளன... அதேபோல நாமக்கல்: மாவட்ட சராசரி 90.21%. குமாரபாளையத்தில் அதிகபட்சமாக 92.65% மற்றும் நாமக்கல்லில் குறைந்தபட்சமாக 87.72% வாக்குகள் பதிவாகின.
திருப்பூர், கிருஷ்ணகிரி
கரூர் மாவட்டத்தில் சராசரி 92.63%. கரூரில் அதிகபட்சமாக 93.40% மற்றும் அரவக்குறிச்சியில் குறைந்தபட்சமாக 91.75% பதிவாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் சராசரி 84.76%. சூலூரில் 88.31% மற்றும் கோவை வடக்கில் குறைந்தபட்சமாக 75.67% வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை சராசரி 88.59%. காங்கேயத்தில் அதிகபட்சமாக 91.56% மற்றும் திருப்பூர் வடக்கில் குறைந்தபட்சமாக 83.14% பதிவாகியுள்ளது.. அதேபோல தருமபுரி மாவட்டத்தில் சராசரி 90.13%. பாலக்கோட்டில் அதிகபட்சமாக 92.57%, அரூரில் குறைந்தபட்சமாக 87.66% பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 85.48%. வேப்பனஹள்ளியில் அதிகபட்சமாக 89.84% மற்றும் ஓசூரில் குறைந்தபட்சமாக 80.35% பதிவாகியுள்ளது. நீலகிரியில் சராசரி 78.92%. கூடலூரில் 80.80% மற்றும் உதகமண்டலத்தில் 77.59% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அதிமுகவின் கோட்டை
எம்ஜிஆர் காலம்தொட்டே கொங்கு மண்டலம் பாரம்பரியமாக அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படுகிறது. ஆனால், கடந்த 2021-ல் ஆட்சியை இழந்தாலும், இந்த மண்டலம் அதிமுகவிற்குப் பெரிதும் கைகொடுத்தது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.. அதிலும் கோவை மற்றும் தருமபுரி மாவட்டங்களை முழுமையாகவும், சேலத்தின் பெரும்பான்மையான இடங்களையும் அதிமுக அப்போது கைப்பற்றியது.
அதனால்தான் இந்த முறையும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பாமக மற்றும் பாஜகவுடன் பலமான கூட்டணி அமைத்து எடப்பாடி பழனிசாமி வியூகங்களை வகுத்தார்.
எடப்பாடி பழனிசாமி போட்ட பிளான்
அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.முனுசாமி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற செல்வாக்குமிக்க தலைவர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள் என்பது அதிமுகவிற்கு பெரிய பலமாக உள்ளது.
அதனால்தான் இந்த முறை பதிவாகியுள்ள இந்த அதீத வாக்குப்பதிவு மாற்றத்திற்கான அறிகுறியாக இருக்குமோ என்ற விவாதமும் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளது. வழக்கமாக வாக்குப்பதிவு அதிகரிப்பது ஆளுங்கட்சிக்கு எதிரான அலையாக பார்க்கப்படுவதால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு இது சாதகமாக முடிய வாய்ப்புள்ளது.
தவெக மொத்த வாக்கையும் பிரிக்குமா?
எனினும் இந்த முறை விஜய் களமிறங்கி உள்ளது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிறார்கள்.. வாக்குப்பதிவு இந்த அளவுக்கு எகிற இளைய தலைமுறையினரை வாக்களிக்கத் தூண்டியதில் விஜய்யின் தாக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் நேரடியாக திமுகவிற்குச் செல்லாமல் தவெகவிற்கும் பிரியும் சூழல் நிலவுகிறது.
தவெக தரப்பில் செங்கோட்டையன், அருண்ராஜ், லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோரைத் தவிரப் பிரபலமான முகங்கள் அதிகம் இல்லை என்பது ஒரு பலவீனமாகக் கருதப்பட்டாலும், அவர்கள் பிரிக்கும் வாக்குகள் தேர்தல் முடிவுகளைப் புரட்டிப் போடலாம்.
கொங்கு யாருக்கு
இதற்கு நடுவில், பாரபட்சம் இல்லாமல், களத்தில் வாரி இறைக்கப்பட்ட கரன்சிகளும், பரிசுப் பொருட்களும் இந்த வாக்குப்பதிவு சதவீதத்திற்குப் பின்னால் இருக்கும் முக்கியக் காரணங்களாகவும் பேசப்படுகிறது.
எனவே கொங்கு மண்டலத்தின் இந்த மெகா வாக்குப்பதிவு அதிமுகவின் கோட்டையை திமுக தகர்க்க வழிவகுக்குமா? அல்லது தவெக எதிர்பாராத சர்ப்ரைஸ்' கொடுக்குமா? அல்லது திமுகவே மெஜாரிட்டியை வாரி சுருட்டிக் கொள்ளுமா? என்பதெல்லாம் வாக்கு எண்ணிக்கையின் போது வெளியாகும்... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications