வீட்டுக் கடன் வாங்கிய கோடக் வங்கியிடமே பல லட்சம் வாங்க போகும் சென்னை செல்வராஜ்.. சாதித்தது எப்படி?
சென்னை: செல்வராஜ் என்பவர் கடந்த 2006ம் ஆண்டு சென்னையில் உள்ள கோடக் மகேந்திரா வாங்கியில் வீட்டை அடமானமாக வைத்து 1.5 கோடி கடன் வாங்கி உள்ளார். அவர் முறையாக மாதத் தவணையை செலுத்தி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் கடன் தொகையை முன்கூட்டியே முழுமை செலுத்துவதாக கூறினாராம். ஆனால் அவரிடம் வீட்டுக் கடனுக்கான தொகையை கூடுதலாக வங்கி வசூலித்தாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கோடக் வங்கி நிர்வாகத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்க போகிறீர்கள் என்றால்,வங்கியில் எத்தனை வருடம் வட்டி அசல் கட்ட வேண்டும்.. முன்கூட்டியே கட்டினால் எவ்வளவு பணம் கட்ட வேண்டும். கூடுதல் இஎம்ஐ கட்ட முடியுமா.. விரைவாக கடனை அடைக்க வழி என்ன என்பது உள்ளிட்டபல்வேறு வழிகளை சரியாக கேட்டுக் கொள்ள வேண்டும்.

அத்துடன் கடன் தொடர்பான ஆவணங்களை கவனமாக படிக்க வேண்டும். சரியாக படிக்காமல் விட்டால் பின்னாளில் சிக்கல் வரலாம். அதேநேரம் வங்கிகள் ஒருவேளை கடன் தொகை அதிகம் வசூலித்தால் அவர்களிடம் அந்த பணத்தை திருப்பி வசூலிக்க நீதிமன்றத்தை நாடலாம். அத்துடன் நஷ்ட ஈடும் கேட்டுப் பெற முடியும். சென்னை சிஐடி நகரைச் சேர்ந்த செல்வராஜ் விவகாரத்தில் நடந்ததை பார்ப்போம்.
சென்னை சி.ஐ.டி. நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் கடந்த 2006-ம் ஆண்டு சென்னையில் உள்ள கோடக் மகேந்திரா வங்கியின் சரல் ஆட்டோ கடன் பிரிவு கிளையில் தனது வீட்டை அடமானமாக வைத்து ரூ.1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். கடன் தொகையை மாத தவணையாக செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நிலுவையில் இருக்கும் கடன்தொகையை முன்கூட்டியே முழுமையாக செலுத்தி கடனை முடித்து விடுவதாக வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தாராம்.
அதற்கு ஒப்புக்கொண்ட வங்கி நிர்வாகம், ரூ.1 கோடியே 70 லட்சம் செலுத்தி வங்கி கடனை முடித்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த தொகையை செல்வராஜ் செலுத்தி உள்ளார்.
இதன் பின்பு தான், வங்கிக்கு 1 கோடியே 37 லட்சத்து 47 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டிய நிலையில் வங்கி நிர்வாகம் ரூ.1 கோடியே 70 லட்சம் வசூலித்தது செல்வராஜ் கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், வங்கி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதை தொடர்ந்து, காலதாமதமாக செலுத்திய தவணை தொகைக்கு அபராதம், முன்கூட்டியே கடனை முடிப்பதற்கான கட்டணம் போக மீதம் ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் இருப்பதாக கூறி அந்த தொகையை திரும்ப வழங்கி இருக்கிறது.
வங்கியின் இந்த முறையற்ற செயல்பாடு குறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோடக் மகேந்திரா வங்கி நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி என்.கோதண்டராஜ் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோடக் மகேந்திரா வங்கி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி வங்கி நிர்வாகத்துக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதில், ரூ.10 லட்சத்தை இழப்பீடாக மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications