வியாபாரிகள் தர்ணா.. கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி.. விரைவில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை
சென்னை: சிறு குறு வியாபாரிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து, கோயம்பேடு மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவைப் போல வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்வதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை தொடர்ந்து எடுத்து வருகிறது.
தமிழக அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகளைக் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. அதன்படி மத விழாக்களுக்கு ரத்து, இபாஸ் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
அதன்படி தமிழக அரசின் அறிவிப்பில் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை மார்க்கெட் செயல்படத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பாதிப்பில் இருந்தே சிறு குறு வியாபாரிகள் மீளாத நிலையில், தற்போதைய தடை பெரும் சுமையை ஏற்படுத்தும் என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.
இதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கோயம்பேடு சந்தை தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோயம்பேடு வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கோயம்பேடு வணிக நிர்வாக முதன்மை இயக்குநர் கோவிந்தராஜ், சிறு குறு மற்றும் சில்லறை வியபார சங்க பிரதிநிதிகள், சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோயம்பேடு சந்தை இன்று மட்டும் சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.