140 கோடி மக்களும் ஜன.22ஆம் தேதி வீடுகளில் விளக்கு ஏற்றணும்! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை
சென்னை: 140 கோடி மக்களும் ஜனவரி 22ஆம் தேதி அன்று வீடுகளில் விளக்கு ஏற்ற வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 16 நாட்களே உள்ள நிலையில் அயோத்தி முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு வருகை தருமாறு நாடு முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயில் இந்தியாவின் கலாச்சார, ஆன்மிக, சமூக அடையாளமாக திகழும் என உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கோவிலில் குழந்தை ராமரின் சிலை ஜனவரி 22அன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட மிக மிக முக்கியப் பிரமுகர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது; ''ஸ்ரீ ராம ஜோதியை ஏற்றுங்கள்..! வருகின்ற 22 ஆம் தேதி அயோத்தியா புண்ணிய பூமியில் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்படுகிறது.''
''இந்தியாவில் இருக்கும் 140 கோடி மக்களும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தாழ்மையுடன் பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதை நாம் அனைவரும் செய்வோம் என்று உறுதி அளிப்போம். ஜெய் ஸ்ரீ ராம்..!'' இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications