சிவகாமி மைந்தனின் தியாகத்தை போற்றுவோம்.. கர்ம வீரர் காமராஜர் 120வது பிறந்த நாளில் தலைவர்கள் வாழ்த்து
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது 120ஆவது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம் என்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 120வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜரின் திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் அனைவரும் காமராஜர் பிறந்தநாளில் சிறப்புகளை நினைவு கூர்ந்து வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளனர்.
காமராஜரின் 120வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் காலை 10 மணியளவில், சென்னை பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப் படத்துக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாள் எனத் தலைவர் கலைஞர் அறிவித்ததே, நாம் கல்வி பெற்றிட அவர் முன்னெடுத்த திட்டங்களைத் தலைமுறைகள் தாண்டியும் எடுத்துக்கூறும்! போராடிப் பெற்ற கல்வி உரிமையால், அறிவார்ந்த நற்சமுதாயமாய் விளங்கிடுவோம்! கல்வியும் மருத்துவமும் நமது அரசின் இரண்டு கண்கள்! தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் நாம் செயல்படுத்தி வரும் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்திடப் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளில் உறுதிகொள்வோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.
கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்தநாளில் அவரைப் போற்றுவோம்; கல்வியில் தமிழகத்தை உயர்த்துவோம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனி என்ற நிலையை மாற்றி, அறிவுப்பசி தீர்க்க ஏழைகளுக்கு இலவசக் கல்வி உண்டு; வயிற்றுப்பசி போக்க இலவச உணவும் உண்டு என்று அறிவித்து ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றிய கர்மவீரர் காமராசருக்கு இன்று 120-ஆவது பிறந்தநாள். இது வரலாற்றில் பொன்னாள்! என்று பதிவிட்டுள்ளார்.
கல்வியில் மட்டுமின்றி, தொழில்துறை, பாசனம் ஆகியவற்றிலும் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர் காமராசர் தான். தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட சிவகாமி மைந்தனின் தியாகத்தை அவரது 120 ஆவது பிறந்தநாளில் நினைவு கூர்ந்து போற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில்புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராசரின் 120-ஆவது பிறந்தநாள் இன்று. தமிழகத்திற்கு பொற்கால ஆட்சி வழங்கிய அவரது வழியில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்துவதற்கு இந்த நாளில் உறுதியேற்போம் என்று பதிவிட்டுள்ளார்.
உலக அரங்கில் தமிழகத்தை தலைநிமிர வைத்தவர் கர்மவீரர். ஆனால், சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்திலிருந்து நீக்கப்பட்ட அவரின் பெயர் இன்னும் மீண்டும் சூட்டப்படவில்லை. உள்நாட்டு முனையத்திற்கும், மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திற்கும் உடனடியாக காமராசர் பெயர் சூட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications