அதிமுகவை கைப்பற்றுவோம்... சசிகலா வந்த பின் நடப்பதை பாருங்க - அமமுக வெற்றிவேல்
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் எல்லோரும் வந்து காலில் விழுவார்கள் அப்படி விழாவிட்டால் கட்சியை கைப்பற்றுவோம்
சென்னை: அவங்களாக வந்து எங்க கிட்ட கட்சியை ஒப்படைக்கணும் அப்படி ஒப்படைக்கா விட்டால் 2021 சட்டசபை தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம் ஒரு இடம் கூட ஜெயிக்க விடமாட்டோம் என்று கூறியுள்ளார் அமமுகவின் வெற்றிவேல். யுடூயூப் செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைமை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா எப்போது வெளியே வருவார் என்று யாராலும் உறுதியாக கூற முடியாத நிலையில் சசிகலா வந்த உடன் அதிமுகவை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார் அமமுகவின் உறுப்பினராக உள்ள வெற்றிவேல்.
ஆர் கே நகர் தேர்தலில் ஜெயித்து டிடிவி தினகரன் ஆளுமை மிக்க தலைமை என்று நிரூபித்தார். அதுபோல பொது தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றால் ஆளுமை தேவை.சசிகலாவிற்கு அந்த ஆளுமை இருக்கிறது. மிகப்பெரிய சதி நடைபெற்ற போது கூவாத்தூரில் போய் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆட்சியை காப்பாற்றினார் என்றும் கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் கூட்டணி, வெற்றி வாய்ப்பு பற்றியும் பேசியுள்ளார் வெற்றிவேல்.
திமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்டு தீர்மானமா? சர்ச்சைக்கு சென்னை மாவட்ட காங். விளக்கம்
சசிகலா வரட்டும்
இப்போது இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் இடைத்தேர்தலில் ஜெயித்திருக்கலாம். எம்பி தேர்தலில் ஜெயிக்க முடியாமல் போனது ஏன் என்று கேட்டுள்ள வெற்றிவேல். சசிகலா சிறையை விட்டு வெளியே வந்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று கூறியுள்ளார் வெற்றிவேல்
அதிமுகவை கைப்பற்றுவோம்
சசிகலா சொல்லித்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம் என்றும் வெற்றிவேல் கூறியுள்ளார். 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் போது நாங்கள் ஒரே சின்னம் வாங்கி விடுவோம். வரும் தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்காது என்கிறார்.
அதிமுகவை தோற்கடிப்போம்
சசிகலா சிறையை விட்டு வெளியே வந்தால் எல்லோரும் காலில் விழுந்து விடுவார்கள். அப்படி வராவிட்டால் வரும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம். எங்க கையில் கட்சி வரணும் வரலைன்னா தோற்கடிப்போம். ஒரு தொகுதி ஜெயிக்க மாட்டார்கள். அப்படி தோற்ற பின்னால் அதிமுக எங்கள் வசமாகும் என்றும் உறுதியோடு சொல்கிறார் வெற்றிவேல்.
மக்கள் அடிமையாகி விடுவார்கள்
திமுக ஆட்சிக்கு வரட்டுமே. அவங்களைப் பற்றி எங்களுத்தெரியும். எங்க இலக்கு அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதே. இல்லாவிட்டால் தமிழ்நாடு மக்கள் அடிமையாகி விடுவார்கள். அமைச்சர்கள்,எம்எல்ஏக்களை பற்றி கவலையில்லை. அதிமுக தொண்டர்கள் சசிகலா வரவேண்டும் என்று விரும்புகின்றனர்.
பாதுகாப்பு உணர்வு
ஜெயலலிதா இருந்த போது ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. இப்போது அப்படி இல்லை. சசிகலா சிறையை விட்டு வெளியே வந்த போது மீண்டும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்கிறார் வெற்றிவேல்.
வீடியோக்களை ரிலீஸ் செய்வோம்
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது எடுத்த வீடியோக்கள் இருக்கின்றன. ஆர் கே நகர் தேர்தலின் போது வெளியிட்ட வீடியோ உண்மை என்று மக்கள் உணர்ந்து கொண்டார்கள். ஜெயலலிதா உயிரோடு நன்றாக இருந்தார்கள் என்ற வீடியோ ஆதாரம் இருக்கிறது.
திமுக உடன் கூட்டணி
பாஜக தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் சரியான சாய்ஸ் என்று நினைக்கிறது. அமமுக திமுக உடன் ஒருபோதும் கூட்டணி வைக்காது, அதே போல பாஜக உடன் கூட்டணி வைக்காது என்றும் கூறியுள்ளார் வெற்றிவேல். சிறையில் இருந்து சசிகலா வெளியே வரும் முன்பே இப்படி பேசினால் வெளியே வந்த பின்னர் இன்னும் என்னென்ன நடக்குமோ பார்க்கலாம். தமிழக மக்கள் அனைத்தையும் பார்க்க தயாராகவே இருக்கிறார்கள்.