9 மாவட்டங்களில் டமால் டுமீல் மழை இருக்காது... வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை :தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தின் 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வானிலை மையத்தின் அறிக்கையில், நாகை, திருவாரூர், தஞ்சை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை பெய்யாத பகுதிகளில், 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 5 சென்டிமீட்டர், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 3 சென்டிமீட்டர், வால்பாறை, சோலையூரில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு தென்மேற்குப் பருவ மழை இடைவேளை விட்டிருந்த போது, ஆகஸ்ட் - செப்டம்பரில் வட தமிழகத்தில் பெய்த மழையை யாரால் மறந்திருக்க முடியும்? எனவே ஜூலை 9-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் பெய்யும் மழைக்காக காத்திருப்போம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
மழைக்காக விவசாயிகள் காத்துள்ளார்கள். வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால், மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். சொல்லும் அளவிற்கு நல்ல மழை பெய்து, தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்புடன் உள்ளனர். இனி வரும் நாட்களில், மழை நீரை சேமித்து வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தடி நீரை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.