தேமுதிகவுக்கு 14 +1 சீட்? தனித்து போட்டி ‘புதைகுழியை’ நோக்கி தள்ளிவிட்டு மண் அள்ளி போடும் பிரேமலதா!
சென்னை: லோக்சபா தேர்தலில் 14 தொகுதிகள் பிளஸ் 1 ராஜ்யசா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்திருப்பது அதிமுக, பாஜக கட்சிகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. லோக்சபா தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட முடிவெடுத்துவிட்டே இத்தகைய ஒரு பேரத்தை அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா முன்வைக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாட்டில் யாராலுமே கண்டு கொள்ளப்படாத ஒரு கட்சியாகத்தான் தேமுதிக இருந்து வந்தது. அக்கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் மறைவால் தேமுதிக மீது ஒரு அனுதாபம் உருவானது. ஆனால் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் தொடர் செயல்பாடுகள் அப்படி எழுந்த அனுதாபத்தை அடியோடு குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கின்றன.

உதாசீனப்படுத்தப்பட்ட தேமுதிக: சில மாதங்களுக்கு டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்துக்கு தமிழ்நாட்டின் சிறிய கட்சிகள் கூட அழைக்கப்பட்டிருந்தன. தங்களை ஆகப் பெரும் கட்சியாக நினைத்து கொள்ளும் தேமுதிகவுக்கு அழைப்பு கூட தரவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக, திமுக இரு கட்சிகளுமே தேமுதிகவை வேண்டாத சுமையாகத்தான் கருதுகின்றன. எந்த கட்சியுமே கூட்டணி சேர விரும்பாத பாஜகவும் கூட தேமுதிகவை எக்ஸ்ட்ரா லக்கேஜாக கருதுவதுதான் பரிதாபம்.
14+1 பார்முலாவால் அதிர்ச்சி: இந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக 4 தொகுதிகள் + 1 சீட் தரும் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என தகவல்கள் வெளியாகின. இது பொதுவாக கட்சிகள் முன்வைக்கும் நிபந்தனை. இதனால் 2 அல்லது 3 தொகுதிகள் தரும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 14 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் தரும் கட்சியுடன் கூட்டணி என ஒரே அடியாக அறிவிக்க ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ச்சியில் உறைந்து போனது.
நோட்டாவிடம் தோற்ற தேமுதிக: தேமுதிகவுக்கு தற்போது என்ன வாக்கு சதவீதம் இருக்கிறது? நோட்டாவுடன் போட்டி போடுகிற ஒரு பரிதாப நிலைதான் தேமுதிக இருந்து வருகிறது. 2006 சட்டசபை தேர்தலில் தனித்தே 232 தொகுதிகளில் போட்டியிட்டு 8.3% வாக்குகளைப் பெற்றதுதான் தேமுதிக. 2011-ல் அதிமுக கூட்டணியில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29-ல் வென்றது வென்று 7.8% வாக்குகளைப் பெற்றது. தற்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைவிட மோசமாகத்தான் தேமுதிக இருக்கிறது. 2016 தேர்தலில் 104 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவுக்கு 2.41% வாக்குகள் கிடைத்தன. 2021 தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து 60 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 0.43% வாக்குகளைத்தான் தேமுதிக பெற முடிந்தது. தமிழ்நாட்டில் 2021 தேர்தலில் நோட்டா பெற்ற வாக்குகள் கூட 0.75%. நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்குகிற கட்சியாகத்தான் தேமுக இருக்கிறது.
புதைகுழிக்குள் தள்ளும் பிரேமலதா: தற்போது விஜயகாந்த் மறைவால் சற்று அனுதாபம் கிடைத்திருக்கிறது. இது வாக்கு சதவீதமாக மாறுமா? என்பதும் தெரியாது. அப்படியே வாக்கு சதவீதமாக மாறினாலும் லோக்சபா தேர்தலிலும் தேமுதிக, நோட்டாவை விட முந்திவிடுமா? என்பதும் தெரியாது. இந்த "பலத்தை" வைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலில் 14 சீட், 1 ராஜ்யசபா சீட் தந்தால்தான் கூட்டணி என்றெல்லாம் பிரேமலதா பேசுவது அபத்தத்தின் உச்சம்; தேமுதிக தனித்து போட்டியிட முடிவு செய்துவிட்டது. அதாவது புதை குழிக்குப் போயே தீருவது என அடம்பிடித்துவிட்டது தேமுதிக. புதை குழிக்குள் தள்ளிவிட்டு கடைசி மண்ணையும் அள்ளிப் போட போகிறார் பிரேமலதா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications