அந்த ஒரு 'சிகரெட்' கேள்வி.. ஏய்.. தப்பு.. கேள்வி கேட்க உரிமை இருக்கிறது.. கொந்தளித்த துரை வைகோ!
திருச்சி: லோக்சபா தேர்தலில் மதிமுக வேட்பாளராக திருச்சியில் போட்டியிடும் அக்கட்சியின் முதன்மை செயலாளரான துரை வைகோ, செய்தியாளர் ஒருவரது கேள்விக்காக தொண்டர்களிடம் கொந்தளித்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம் பெற்றுள்ளது. இத்தேர்தலில் மதிமுகவுக்கு திருச்சி லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன், துரை வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் துரை வைகோ நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கொரோனா கால சவால்களை எதிர்கொண்டு திமுக ஆட்சி செயல்பட்டது. தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு நிதி நிலை நெருக்கடி இருந்த போதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 2021 சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். நிதி நெருக்கடி இருந்த போதும் மகளிர் உதவித் தொகை கொடுத்து வருகிறது திமுக அரசுதான் என்றார்.
மேலும், திருச்சியில் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திருச்சியில் புதிய விமான நிலையம் திறந்து பல மாதங்களாகிவிட்டன. ஆனால் இன்னமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இந்த திருச்சி புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் பல மாதங்களாகும் என்கின்றனர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று வரை எதுவும் நடக்கவில்லை. அதே நிலைமைதான் திருச்சி விமான நிலையத்துக்கும் ஏற்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார் துரை வைகோ.
இந்த சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர், சிகரெட் கம்பெனி நடத்துகிறவர்கள் எல்லாம் நாட்டு நலனில் அக்கறையா இருப்பாங்களா?ன்னு கேட்கிறார்களே என கேள்வி எழுப்பினார். இதற்கு, இல்லை.. இல்லை.. தோழர்கள் ஆத்திரப்படாதீங்க.. பத்திரிகை நண்பர் அவருடைய கேள்வியை கேட்கிறார்.நில்லு.. நில்லு.. ஏய்.. தப்பு (நிர்வாகிகளைப் பார்த்து).. (ஆவேசமாக) பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க உரிமை இருக்கிறது. அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு.. அவரை இன்சல்ட் பண்ண கூடாது; அவருடைய கேள்வியின் நோக்கம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். இங்க இருக்கிற பத்திரிகையாளர்களுக்கும் தெரியும். நான் பதில் சொல்கிறேன் என்றார். இதனைத் தொடர்ந்து ஐடிசி டிஸ்ட்ரிபியூட்டராக பினாமி பெயரில் அல்ல என் பெயரில்தான் 16 ஆண்டுகள் நடத்தினேன். ஐடிசி 5% தான் புகையிலை பொருட்களை விற்பனை செய்கிறது. மது எப்படி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடோ அதே போல புகையிலை பொருட்களும் கேடுதான். அதனால் எனக்கு கிடைத்த அந்த ஒரே ஒரு தொழிலையும் நான் விட்டுவிட்டேன் எனவும் விளக்கம் தந்தார் துரை வைகோ.












Click it and Unblock the Notifications