வாகன சோதனையில் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் மீட்பது எப்படி? ரொம்ப முக்கியம்
சென்னை: லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தால் அதனை மீட்பது எப்படி? என்பது பற்றிய விபரம் வருமாறு:
இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் என்பது அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி நடைபெற உள்ளது. 7 வது கட்ட தேர்தல் ஜுன் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் ஏப்ரல் 19 ம் தேதியே ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த உடனேயே நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழ்நாட்டில் பறக்கும் படைகள் மூலம் பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 900 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதியை பொறுத்தமட்டில் பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேலான பணத்தை எடுத்து செல்லும்போது கண்டிப்பாக ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்வார்கள். தமிழ்நாட்டில் சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்றதால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பல வியாபாரிகள், வணிகர்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் பறக்கும் படையால் பணம் பறிமுதல் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.
பொதுவாக தேர்தல் சமயங்களில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக ஆவணங்கள் இன்றி எடுத்து செல்வதை பறிமுதல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது ஒன்றும் புதிய நடைமுறை அல்ல. இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் பணம் மாவட்ட கருவூலங்களில் ஒப்படைக்கப்படும். இந்த பணத்தை ஒருவாரத்துக்குள் மீண்டும் திரும்ப பெற்று கொள்ளலாம். அதற்கு உரிய ஆவணங்களை கருவூலத்தில் கொடுத்தால் போதுமானது.
ஒருவேளை நீங்கள் பணத்துக்கான ஆவணங்களை சமர்ப்பிக்காவிட்டால் அந்த பணம் கருவூலத்தில் தனியே சீல் வைத்து வைக்கப்படும். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தப்படும். அதிலும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான பணம் ஆவணங்களின்றி சிக்கினால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பிறகு ஆவணங்கள் ஒப்படைத்தாலும் வரி கட்ட வேண்டி இருக்கும்.
சில இடங்களில் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பணம் ஆவணங்களின்றி எடுத்து சென்றாலே வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கும் வழக்கமும் உள்ளது. இதனால் பொதுமக்கள் லோக்சபா தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்வரை உரிய ஆவணங்களோடு பணத்தை எடுத்து செல்வது தான் சிறந்ததாகும்.












Click it and Unblock the Notifications