திமுக அணியில் காங், விசிக செம்ம குஷி..அவங்க வரவேமாட்டாங்க..ரூட்டை 'டெல்லி'க்கே திருப்பிய 'தைலாபுரம்'
சென்னை: திமுக கூட்டணியில் பெரும் பிரளயத்தையே உருவாக்குமா பாமகவின் வருகை? என்கிற விவாதங்களுக்கு தற்போது ஒருவழியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் பெருமூச்சு விடுகின்றனராம்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் "இந்தியா" கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, கொமதேக, தவாக, முஸ்லிம் லீக் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் நாளை முதல் அதிகாரப்பூர்வமான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன.

காங்கிரஸ் கேட்பதும் திமுக கொடுக்க நினைப்பதும்: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். திமுகவைப் பொறுத்தவரையில் 2019 லோக்சபா தேர்தல் பார்முலாவையே பின்பற்றலாம் என்பது நிலைப்பாடு. இதனடிப்படையில் காங்கிரஸுக்கு தமிழ்நாட்டில் 9 ப்ளஸ் புதுச்சேரி 1 என தொகுதிகள் ஒதுக்கலாம் என நினைக்கிறதாம் திமுக. ஆனால் ராகுல் காந்தி யாத்திரைக்கு பின் பெரும் ஆதரவு கிடைத்துவிட்டது; அதனால் அதிகபட்சமாக 18 தொகுதிகள்; குறைந்தபட்சம் 15 தொகுதிகள் ஒதுக்க கேட்போம் என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்து வருகிறதாம்.
விசிக: அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் கடந்த முறை 2-ல் போட்டியிட்டு இரண்டையும் கைப்பற்றினோம். இம்முறை 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கேட்க உள்ளனர் எனவும் கூறப்பட்டது.
பாமகவின் ஊசலாட்டம்: அதேநேரத்தில் திமுக கூட்டணிக்குள் பாமக வரும் என்கிற ஒரு தகவலும் ரெக்கை கட்டிப் பறக்க பெரும் சலசலப்பும் விஸ்வரூபம் எடுத்தது. திமுக கூட்டணியில் பாமக வந்தால், காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்க நினைத்த 8 அல்லது 9 தொகுதிகள் கூட கிடைக்காது; 4 அல்லது 5 தொகுதிகளுக்குதான் சாத்தியம் என்பது ஒரு பக்கம்; இன்னொரு பக்கம் பாமக வந்துவிட்டால் இயல்பாகவே திமுக அணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் வெளியேறும் சூழ்நிலை உருவாகும். திமுக அணியில் காங்கிரஸ் கட்சி 4 அல்லது 5 தொகுதிகளை ஒப்புக் கொள்ளாமல் போனால் அதிமுக 15 அல்லது 18 தொகுதிகளை தரவும் தயாராக இருக்கிறது. விசிகவுக்கும் 4 முதல் 5 தொகுதிகள் தரவும் அதிமுக தயார்தான் என்கிற நிலைமைதான் இருந்து வந்தது.
ரூட்டை மாற்றிய தைலாபுரம்: ஆனால் தற்போது காங்கிரஸும் விடுதலை சிறுத்தைகளும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனவாம். ஏனெனில் பாமக, திமுக கூட்டணிக்கே வராது என்பதுதான். இது தொடர்பாக பாமக வட்டாரங்களில் பேசிய போது, திமுக கூட்டணிக்கு போனாலும் காங்கிரஸுக்கு கொடுக்க வேண்டிய இடங்களில் சரி பாதியைத்தான் தருவார்கள். 4 அல்லது 5 தொகுதிகளில் மட்டுமே பாமக போட்டியிடும் நிலைமை வரும். அதைவிட 10 அல்லது 12 தொகுதிகளில் போட்டியிடுவதுதான் எங்கள் விருப்பம். அதிமுக கூட்டணியைவிட பாஜகதான் தற்போதைய நிலையில் எங்களுக்கான சரியான வாய்ப்பு. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் போது மத்திய அமைச்சர் பதவியும் கிடைக்கும் என்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடருவது என முடிவெடுத்துவிட்டோம் என்கின்றனர். பாமகவின் இந்த முடிவு காங்கிரஸ், திமுக, விசிக தரப்புக்கும் திட்டவட்டமாகவே பாஸ் செய்யப்பட்டுவிட்டதாம். இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸும் விசிகவும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனவாம். திமுக தலைமையும் சலசலப்பு இல்லாமல் தொகுதி பங்கீடு முடிந்துவிடும் என நிம்மதியாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications