அடுத்த ஜெ. ஆகிறாரா இபிஎஸ்.. வாய்ப்பை நழுவவிட்ட ஓபிஎஸ்.. அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை?
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குழப்பமும், பரபரப்பும் உச்சத்தை எட்டியது. அதில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றைத் தலைமையை எடப்பாடி பழனிசாமி தான் ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் மறுபக்கம் ஓபிஎஸ், இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் அவர் இதுநாள் வரை, ஒற்றைத் தலைமையாக நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று விவாதத்தில் கூட ஈடுபடவில்லை. இந்தத் தருணம் மட்டுமல்ல, இதுவரை எடப்பாடி பழனிசாமி சுதாரித்துக் கொண்ட தருணங்களையும், ஓபிஎஸ் கைநழுவவிட்ட நிகழ்வுகளையும் பார்க்கலாம்.
கார் இல்லை! ஹவுசிங் போர்டு வீட்டில் தான் குடித்தனம்! அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் எளிமை!
இபிஎஸ் முன்னேற்றம்
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் நடைபெற்ற களேபரங்களால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அதிமுகவில் நடைபெற்ற ஒவ்வொரு விவகாரங்களிலும் எடப்பாடி பழனிசாமியின் கைகளே ஓங்கியுள்ளது. ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைப்பின் போது, எக்காரணத்தைக் கொண்டு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று இபிஎஸ் நின்றார். அதேபோல் கட்சியில் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்றாலும், அதற்கு இணையாக எடப்பாடி பழனிசாமியும் இணை ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இங்கே ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி இபிஎஸ் கைகள் ஓங்கி இருப்பதை காணலாம்.
சசிகலாவை எளிதாக இபிஎஸ்
இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு பின் 4 ஆண்டுகள் அதிமுக ஆட்சியையும், கட்சியையும் எவ்வித பிரச்னையும் இன்றி எடப்பாடி பழனிசாமி பாதுகாத்துக் கொண்டு வந்துவிட்டார் என்ற பெயரும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியது. இதன் நடுவே சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று களமிறங்கியதும், அதனை எடப்பாடி பழனிசாமி சிரமமின்றி எதிர்கொண்டதும் மக்கள் மத்தியில் கூடுதல் ஆதரவை பெற்றிக் கொடுத்தது.
எதிர்க்கட்சி வேட்பாளர்
தொடர்ந்து நடைபெற்ற 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பரப்புரை மேற்கொண்டு அதிமுகவின் முகமாக எடப்பாடி பழனிசாமி மாறினார் என்றே கூறலாம். அதுமட்டுமல்லாமல், யார் எதிர்க்கட்சியின் முகம் என்ற விவாதம் வரும்போது, ஓ.பன்னீர் செல்வத்துடன் விவாதம் செய்து, தனது இடத்தைப் பாதுகாத்துக் கொண்டார். அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர், எதிர்க்கட்சித் தலைவர், ஆதரவாளர்களுடன் நிற்பது என அனைத்து பிரச்னைகளையும் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்-ஐ படிப்படியாக முன்னேறி சென்றார்.
நழுவவிட்ட ஓபிஎஸ்
எம்ஜிஆர் மறைந்த பின் ஜானகி விட்டுக்கொடுத்ததால், அதிமுகவின் ஒற்றை முகமாக ஜெயலலிதா அடுத்த சில ஆண்டுகளிலேயே மாறினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அதிமுகவின் முகம் தாம்தான் என்று அனைவருக்கும் காட்டியுள்ளார் என்றே கூறலாம். ஆனால் மறுபக்கம் ஓபிஎஸ், தன்னை நம்பி வந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், கே.பாண்டியராஜன் என யாரையும் தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. அதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நின்று பதவிகளை கைப்பற்றவும் தவறினார்.
ஒற்றைத் தலைமை
இவையனைத்தும் ஒன்றாக சேர்ந்து ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாறியது என்று கூறலாம். அனைத்து மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் இபிஎஸ்-க்கு ஆதரவளித்து வரும் நிலையில், ஒபிஎஸ் பக்கம் ஒன்றிரண்டு முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளனர். ஜெயலலிதாவால் கைக்காட்டப்பட்டவன் என்ற ஒரேயொரு விஷயத்தை வைத்துக்கொண்டு ஓபிஎஸ் தலைமையாக மாறுவாரா என்ற கேள்வியும் உள்ளது. இதனால் அடுத்தடுத்த நிகழ்வுகளில், எடப்பாடி பழனிசாமியின் பாய்ச்சல், இன்னும் கூடுதலாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவின் அடுத்த ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.