“தோனி.. தோனி..” வந்து விழுந்த கேள்வி..மஞ்சள் டீ சர்டுடன் குலுங்கிய லக்னோ! எல்லாம் நம்ம கிரவுண்டுதான்
சென்னை: நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் அனைத்து மைதானங்களிலும் ரசிகர்கள் மஞ்சள் டீசர்டு அணிந்து வந்து ஆர்ப்பரிக்கும் நிலையில், இன்று தோனி டாஸ் போடும் சமயத்தில் பேசியபோது ரசிகர்கள் "தோனி.. தோனி.." என்று ஆர்ப்பரித்தனர்.
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. குஜராத் - சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியுடன் தொடங்கிய இந்த தொடரில் தற்போது 2 வது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்று 4 வது இடத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி முதலிடத்திலும், ராஜஸ்தான் 2 வது இடத்திலும் லக்னோ மூன்றாவது இடத்திலும் உள்ளன. பெங்களூரு 5 வது இடத்திலும், பஞ்சாப் 6 வது இடத்திலும் உள்ளன.
மும்பை 7 வது இடத்திலும், கொல்கத்தா 8 வது இடத்திலும், ஹைதராபாத் 9 வது இடத்திலும், டெல்லி 10 வது இடத்திலும் உள்ளன. இதில் 2 முதல் 6 வது இடத்தில் உள்ள 5 அணிகளும் தலா 10 புள்ளிகளை எடுத்து ரன் ரேட் அடிப்படையில் தரவரிசையில் முன்னிலை வகித்து வருகின்றன. இன்றைய போட்டியில் சென்னை வென்றால் தரவரிசையில் 2வது இடத்துக்கு செல்லும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி இருக்கும் 9 போட்டிகளில், சேப்பாக்கத்தில் விளையாடி போட்டிகளை உள்ளூர் ரசிகர்கள் படைதிரண்டு சென்று பார்த்து, தோனியின் ஒவ்வொரு நகர்வையும் ரசித்தனர். அவரது சிக்சர்களை காண்பதற்கே கூட்டம் அலைமோதியது. சில நொடிகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

சேப்பக்கத்தில் மட்டும்தான் இந்த நிலையில் என்றால், அதுதான் இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் எந்த மாநில மைதானத்துக்கு விளையாட சென்றாலும் அது சென்னை மைதானமாக மாறிவிடும் அளவுக்கு தோனி ரசிகர்கள் மஞ்சள் டீ சர்ட் அணிந்து ஆர்ப்பரிக்கத் தொடங்கி விடுகிறார்கள். சென்னை அணி இதுவரை அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஜெய்பூர் என 4 முறை வெளி மைதானங்களிலும் 5 முறை சேப்பாக்கத்திலும் விளையாடி உள்ளது.
இந்த 4 நகரங்களிலும் தோனி கில்லி என்பதற்கு எடுத்துக்காட்டாக ரசிகர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டில் தோனியை காண ரசிகர்கள் குவிந்து வருவதற்கு காரணம், இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடர் என்ற பேச்சு இருந்தது. ஆனால், இது பற்றி தோனி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், இன்றைய போட்டியில் தோனி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
லக்னோ - சென்னை அணிக்கு எதிரான போட்டி இன்று நடைபெற்றும் வரும் நிலையில், டாஸ் போடும்போது நெறியாளர் தோனியிடம் இது உங்கள் கடைசி தொடர் என்று கேட்டார். அப்போது சற்று அமைதி காத்த தோனியை உற்சாகப்படுத்த தோனி.. தோனி.. என்று லக்னோ ரசிகர்கள் முழங்கினர். அப்போது மைதானத்தில் லக்னோவில் நீள நிற சீருடையைவிட சென்னையின் மஞ்சள் சீருடையே அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications