சென்னையில் பரவும் ‛மெட்ராஸ் ஐ’ கண்வலி.. உஷார் மக்களே.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
சென்னை: சென்னையில் மெட்ராஸ் ஐ எனும் கண்வலி நோய் பரவி வருகிறது. பருவமழை தொடங்கிய நிலையில் ஏராளமானவர்கள் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்படுவதால் அனைவரும் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகி உள்ளது.
இந்தியாவில் பருவமழை காலங்களில் பொதுவாக தொற்று நோய்கள் பரவ தொடங்குகிறது. அதாவது பருமழை காலத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கும்.
இந்த தண்ணீரில் வசிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸால் தான் தொற்று நோய்கள் பரவி வருகின்றன. அப்படி பருவமழை சமயத்தில் பரவும் ஒரு தொற்று நோய் தான் Madras Eye எனும் கண்வலி அல்லது கண் நோயாகும்.

சென்னையில் பரவும் ‛மெட்ராஸ் ஐ’
சென்னையில் கடந்த 2 நாட்களாக வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் நிலையில் தற்போது Madras Eye எனும் கண்வலியால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இது வழக்கத்தை விட தற்போது அதிகரித்துள்ளது.

மெட்ராஸ் ஐ என்றால் என்ன?
இதனால் தான் பொதுமக்கள் அனைவரும் மெட்ராஸ் ஐ என்பது என்ன? அதில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது என்பது பற்றிய விஷயங்களை அறிந்து வைத்து கொள்வது முக்கியமாகும். அதாவது மெட்ராஸ் ஐ எனும் கண்வலி அடினோ வைரஸ் மூலம் தான் பரவுகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு பிறகு கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், லேசான வீக்கம், அரிப்பு உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அது மெட்ராஸ் ஐ ஆக இருக்கலாம்.

தானாகவே சரியாக வாய்ப்பு
இத்தகைய அறிகுறி இருப்பவர்கள் டாக்டரை பார்க்க வேண்டும். பொதுவாக மெட்ராஸ் ஐ எனும் கண்வலியை பொறுத்தமட்டில் 50 சதவீதம் பேருக்கு தானகவே சரியாக வாய்ப்புள்ளது.. சிலருக்கு 3 நாட்களில், சிலருக்கு ஒரு வாரத்தில் கண்வலி குணமாகலாம். இன்னும் சிலருக்கோ 15 நாட்கள் வரை ஆகலாம். மேலும் கண்ணில் வேறு ஏதேனும் பிரச்சனை இருப்பினும் உடனடியாக மக்கள் மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அதோடு மருத்துவர்களின் பரிந்துரைப்படியே மருந்துகளை கண்ணில் பயன்படுத்த வேண்டும். நாமாகவே மருந்துகளை பயன்படுத்த கூடாது. ஏனென்றால் இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

கண்ணீர் மூலம் பரவும்
பொதுவாக மெட்ராஸ் ஐ ஆல் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணை பார்த்தால் மெட்ராஸ் ஐ அவருக்கும் பரவும் என்ற தகவல் உள்ளது. ஆனால் இதனை கண் மருத்துவர்கள் மருத்துள்ளனர். அதாவது கண்வலியால் பாதிக்கப்பட்ட ஒருவரின் கண்ணை பார்ப்பதன் மூலம் மெட்ராஸ் ஐ இன்னொருவருக்கு பரவுவது இல்லை. மாறாக மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்ட நபரின் கண்ணீரில் இருந்து இந்த நோய் பரவும்.

தனிமைப்படுத்தி கொள்ள..
இதனால் மெட்ராஸ் ஐ பாதித்த நபர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கொண்டு கண்களை தொடக்கூடாது. மேலும் 10 நிமிடத்துக்கு ஒருமுறை கையை சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மெட்ராஸ் ஐ பாதித்த நபரின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் மெட்ராஸ் ஐ பரப்பும் வைரஸ் பொருட்களின் மேற்பரப்பில் நீண்டகாலம் வாழும். எனவே பொதுமக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications