துணிவு, வாரிசு..சட்டவிரோதமாக வெளியிட இணைய தளங்களுக்கு தடை..ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்களை சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இரண்டு படங்களும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் வாரிசு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், துணிவு படத்தை 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென மனுதாரர் கேட்டுக்கொண்டதை அடுத்து ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் நாளை ஒரே நாளில் வெளியாகிறது. சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்களும் அஜீத் ரசிகர்களும் மாறி மாறி பதிவிட்டு மல்லுக்கட்டி வருகின்றனர்.

துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் நாளைய தினம் வெளியாக உள்ளது. பொங்கல் நாளில் வெளியாகும் படத்தை திருவிழா போல கொண்டாட அஜீத், விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இரு முன்னணி நடிகர்களின் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு படங்களையும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிட தடைக்கோரி தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்கள் நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, இரண்டு படங்களும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு படங்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

இரண்டு படங்களும் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடப்பட்டால் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால் வாரிசு படத்தை சட்ட விரோதமாக வெளியிட 4,548 இணையதள பக்கங்களுக்கும், துணிவு படத்தை 2,754 இணையதள பக்கங்களுக்கும் தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, துணிவு மற்றும் வாரிசு திரைபடங்களை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications