சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான விசாரணைக்கு தடை! ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத் துறை விசாரணை நடத்த, இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2001-2006-ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக 2020-ம் ஆண்டில் வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. இதில், வருமானத்திற்கு அதிகமாக அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.2 கோடியே 7 லட்சத்து 96,384 சொத்து சேர்த்ததாக கூறி அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை முடக்கியது.
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துவிட்டதால், அந்த சட்டத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறி, மறு உத்தரவு வரும்வரை அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications