திருப்பூரில் அனுமதியின்றி அரசியல் கட்சி பேனர்கள்.. அதிரடி மனு.. உடனே நீக்குங்க.. ஹைகோர்ட் உத்தரவு
"அரசு இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளது"
சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் பேனர்களை அகற்றக் கோரிய மனுவை மூன்று வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என திருப்பூர் மாநகராட்சிக்கும், மாநகர காவல்துறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களால் பல விபத்துகளும், அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டன. இதன் தொடர்ச்சியாக, இவ்வாறு பேனர்கள் வைக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அனுமதி பெறாமல் அரசியல் கட்சிகளோ, தனி நபர்களோ பேனர்களை வைக்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்நிலையில், திருப்பூரில் அனுமதியின்றி பல அரசியல்கள் பேனர்களை வைப்பதாக கூறி இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான கே.கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூரில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதியைப் பெறாமல் சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைத்துள்ளன. இந்த விளம்பர பலகைகளால் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் பெரும் இடையூறு ஈடுபடுகிறது.
அன்புமணி 4 சிஎம்! கத்தார் உலக கோப்பை மேட்சில் ஜொலித்த பேனர்! கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியினர்!
அரசு இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பேனர்களால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளதால், அவற்றை அகற்றக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்த பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோபிநாத் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த மனுவானது, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி, மனுதாரரின் கோரிக்கை மனுவை மூன்று வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், காவல் ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.