பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம்.. தேச துரோக வழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன்.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாகத் தேசத் துரோகம் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு மாவோயிஸ்ட்கள் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்ட சிலர், பிரதமர் மோடிக்கு எதிராகவும் போலீசாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக உபா சட்டத்தின் கீழ் இருவர் மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர்கள் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பவர்கள் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருக்கும், இவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இருவருக்கும் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார். இருவரும் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பிரதமர் மற்றும் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், அவர்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் எவ்வித செயல்களிலும் ஈடுபடவில்லை என்று இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
பொது நலனுக்காக இறுதி வரை உழைத்த சமூக போராளி 'டிராபிக்' ராமசாமி.. கனிமொழி, ஓபிஎஸ் இரங்கல்
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்தச் சம்பவம் 2019இல் நடைபெற்றது என்பதாலும், மவோயிஸ்ட் தலைவரைப் புகழும் வகையில் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள் என்பது மட்டுமே அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்பதாலும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.