தமிழகத்தில் போதை பொருட்கள் தாரளமாக கிடைப்பது போலீசாருக்கு தெரியாதா? சென்னை ஐகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா.. தெரியாதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கத் தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்குகளைச் சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா என்றும் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 2017ஆம் ஆண்டு பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றம்: இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து 2018ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி இப்பகுதிகளை ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையில், இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் தாராளமாக இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருட்கள்: அதேபோல, தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாகக் கிடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பள்ளி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினர். போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்கத் தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லையா? இந்த வழக்குகளைச் சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேட்டனர்.
இதற்குப் பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான காவல்துறையினரும் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்தார். மேலும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர், வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.
உத்தரவு: வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையைச் செப்டம்பர் 9ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications