அதிமுகவிற்கு இனி ஒற்றை தலைமைதான்.. எடப்பாடிக்கு மீண்டும் கிடைத்த இடைக்கால பொதுச்செயலாளர் பதவி!
சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வந்தனர். இதனால் அதிமுகவில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இதனையடுத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுடன் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். இதனை ஓபிஎஸ் தரப்பு கடுமையாக எதிர்த்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் கடும் குழப்பங்கள் ஏற்பட்டது. அப்பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.
போச்சு.. ஓபிஎஸ்ஸுக்கு தோல்வி! ஒரே தீர்ப்பால் அதிமுகவில் 6 பெரிய ட்விஸ்ட்! தீர்ப்பு சொல்வது என்ன?
ஜூலை 11 பொதுக்குழு
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11-ந் தேதி ஒரு பொதுக்குழுவை கூட்டியது. அந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டன; ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். ஓ.பி.எஸ்.-ன் பொருளாளர் பதவிக்கு திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளர் பதவிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பொதுச் செயலாளருக்கு மாற்றப்பட்டன. அத்துடன் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டார்.
தனி நீதிபதி தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமி தரப்பின் ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு செல்லாது; ஜூன் 23-ந் தேதிக்கு முன்னதாக அதிமுகவில் இருந்த நிலைமையே தொடரலாம் என தீர்ப்பளித்தார். இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்ற பதவியும் பறிபோனது. இத்தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
எடப்பாடி தரப்பு அப்பீல்
இம்மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயணன், சி.எஸ். வைத்தியநாதன், அரிமா சுந்தரம், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோர் வாதிட்டனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார், அரவிந்த் பாண்டியன், சி.திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர் வாதிட்டனர்.
ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு
இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் தீர்ப்பை வழங்கினர். இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்பு ஜூலை 11-ந் தேதி கூட்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் அடிப்படையில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, ஜூலை 11-ந் தேதி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டதும் செல்லும். இதனால் இழந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் பெற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி.