2022 நினைவுகள் : இந்தியாவை புரட்டிப் போட்ட முக்கிய தீர்ப்புகள்! தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கமென்ன?
சென்னை : 2022ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் நிறைவடைய இருக்கும் நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சில தீர்ப்புகள் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன. அவ்வாறு 2022ஆம் ஆண்டின் சில முக்கிய தீர்ப்புகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்..
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கலாச்சாரம் கொண்ட ஒரு நாட்டில் நீதிமன்றங்களின் பங்கு மிக முக்கியமானது. சமூகம் பொருளாதாரம் ஏன் சில நேரங்களில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை கூட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளில் அடிப்படையிலேயே மக்களுக்கு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிலும் சில தீர்ப்புகள் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் என வழங்கப்பட்ட அந்த தீர்ப்புகள் இந்திய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அதில் குறிப்பிட்ட சில தீர்ப்புகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
11 குற்றவாளிகள் விடுதலை.. பில்கிஸ் பானுவின் கடைசி நம்பிக்கை! வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
27 % இட ஒதுக்கீடு
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி 2021 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு எதிராக முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வை எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு திமுக உள்ளிட்ட பல்வேறு மனுதாரர்கள் இணைந்த நிலையில் பல வாதங்கள் முன்னெடுத்து வைக்கப்பட்டன. 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்தனர்.
ஹிஜாப் விவகாரம்
இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே கர்நாடக மாநிலத்தை ஹிஜாப் விவகாரம் உலுக்கி எடுத்தது. போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை அடுத்து கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் ஹிஜாப் குறித்து நடவடிக்கை எடுத்த உடுப்பி அரசு கல்லூரி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மார்ச் மாதம் தீர்ப்பளித்த கர்நாடக உயர் நீதிமன்றம்,"ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி அத்தியாவசிய பழக்கவழக்கம் அல்ல எனவும் இது மத உரிமையின் கீழ் வரவில்லை என்றதோடு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விரிக்கப்பட்ட தடை செல்லும் என பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. இது அப்போதைக்கு கர்நாடகா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
உயர்சாதி ஏழைகளுக்கு 10%
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் 103வது அரசியல் சட்ட திருத்த மசோதா கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி, விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரித்து. இந்நிலையில் தலைமை நீதிபதி லலித் நீதிபதி ரவீந்திர பட் 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பளித்தனர். மற்ற 3 நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்ததால் பெரும்பான்மை அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என சட்ட அமர்வு உறுதி செய்தது.
வன்னியர் உள் ஒதுக்கீடு
2021ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் , சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவித்தது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பாமக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பு செல்லும் என மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலை
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆளுநர் இதுகுறித்த முடிவெடுக்க தாமதம் செய்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் அதிரடியால் விடுதலைக் காற்றை சுவாசித்தார் பேரறிவாளன். பேரறிவாளன் விடுதலை சிறையில் உள்ள மற்ற ஆறு பேரது விடுதலைக்கான அச்சாரமாக இருக்கும் என பலரும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் திமுக, அதிமுக, மதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அந்த விடுதலையை கொண்டாடின. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போல தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என இந்த வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. இதை அடுத்து முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.