2 பேர் தான்.. “இராவண வதம்”.. எடப்பாடியை ஓட விடப் போறாங்களாம்.. வார்னிங் கொடுத்த ‘ராஜதந்திரி’! ஆஹா!
சென்னை : எப்போதெல்லாம் சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை ஓட விட்டதுதான் வரலாறு எனக் குறிப்பிட்டு ராமாயணம், சிலப்பதிகார நூல்களைச் சுட்டிக்காட்டி ஈபிஎஸ் தரப்பை தாக்கிப் பேசி இருக்கிறார் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது முதலே, எடப்பாடி பழனிசாமி அணியே பெரும்பான்மை நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற அணியாக இருக்கிறது.
ஆனால், தொண்டர்கள் பலம் தன்னிடம் தான் இருக்கிறது என ஓபிஎஸ் கூறி வருகிறார். மிகக்குறைவான தலைமைக் கழக நிர்வாகிகளே தன் பக்கம் இருந்தாலும் விடாமல் எடப்பாடிக்கு எதிராக சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார் ஓபிஎஸ்.
இந்நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதவி தப்புமா? சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
அதிமுகவின் அதிகாரத்தைக் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே கடுமையான போட்டியும் மோதல் போக்கும் நிலவி வருகிறது. இருவருமே தங்களது ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு கட்சியை கைப்பற்ற பல்வேறு வழிகளில் திட்டங்களை தீட்டியபடி காய்களை நகர்த்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி ஒருபடி மேலே போய், அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என முடிசூட்டிக்கொண்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டே நீக்கினார்.
தீர்ப்புக்கு வெய்ட்டிங்
ஈபிஎஸ் தரப்பு கூட்டிய பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். பல கட்டங்களைத் தாண்டி பிறகு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருதரப்புக்குமே மிக முக்கியமானதாக இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு முன்னோட்டமாக இந்த தீர்ப்பு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
யாருக்கு பலம்?
அதிமுக மோதல் தொடங்கியது முதலே, எடப்பாடி பழனிசாமிக்கே அதிகமான நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொதுக்குழு உறுப்பினர்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஈபிஎஸ் ஆதரவாளர்களானதன் காரணமாகவே ஈபிஎஸ் ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். மேலும், 60க்கும் அதிகமான எம்.எல்.ஏக்கள் ஈபிஎஸ் வசம் இருக்கின்றனர். ஓபிஎஸ் பக்கம் அவரோடு சேர்த்து 4 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால், எடப்பாடி தரப்பே பெரும்பான்மை பலம் கொண்ட அணியாக இருக்கிறது.
வலிமை காட்டும் எடப்பாடி
இதனால், எடப்பாடி தரப்பினர் தங்கள் அணியே உண்மையான அதிமுக என்றும், ஓபிஎஸ் பலவீனமானவர் என்றும், அவர் பின்னால் தொண்டர்கள் செல்லமாட்டார்கள் என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நீதிமன்றங்களிலும், தங்கள் அணிக்கே பெரும்பான்மை இருப்பதைச் சுட்டிக்காட்டி வருகிறது எடப்பாடி தரப்பு. இந்நிலையில், பெரும்பான்மையை சிறுபான்மை விரட்டி ஓட விடும் எனப் பேசி இருக்கிறார் ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
சிறுபான்மை வென்றுவிடும்
சென்னை ராமாபுரத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன், "பெரும்பான்மையை சிறுபான்மை வென்றுவிடும். சிறுபான்மை எப்போதெல்லாம் தர்மத்தின் பக்கம் நிற்கிறதோ, அப்போதெல்லாம் பெரும்பான்மையை சிறுபான்மை வென்றுவிடும். மகாபாரதத்தில் மட்டுமல்ல, ராமாயணத்திலும் கூட லங்கேஸ்வரன் மாமன்னன், ஆனால், ராமர் அவரது தம்பி என இரண்டே பேர் தான். இராவண வதம் நடந்ததா இல்லையா?
ஓட விட்டதுதான் வரலாறு
சிலப்பதிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். செங்கோலோச்சிய மாமன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன். கணவனை இழந்து, கைச்சிலம்பையும் இழந்து, ஒரே ஒரு சிலம்பை மட்டும் கையில் ஏந்தி கண்ணகி, நீதியை நிலைநாட்டுகிறாள். அங்கே அரசன் கவிழ்ந்து உயிரை விடுகிறான். ஆகவே, எப்போதெல்லாம் அதிகாரத்திலே இல்லாமல் சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்கள் தர்மத்தின் பக்கம் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை கவிழ்த்து ஓட விட்டதுதான் வரலாறு எடுத்துச் சொல்லியிருக்கிற பாடம்.
தர்மத்தின் பக்கம்
நாம் தர்மத்தின் பக்கம் நிற்கிறோம். தர்மம் தலைகாக்கும் என நமக்குச் சொல்லிக் கொடுத்தவர் எம்ஜிஆர். எம்ஜிஆரின் பணி தொடர வேண்டும் என்றுதான் இன்று நாம் ஓபிஎஸ் பக்கம் நிற்கிறோம். எம்ஜிஆர் கையொப்பம் இடும்போதெல்லாம் உழைப்போரே உயர்ந்தோர் என எழுதித்தான் கையெழுத்திடுவார். தன் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோது ஆட்டோகிராஃப் கேட்டவர்களுடமும், அவர் உழைப்போரே உயர்ந்தோர் என எழுதித்தான் தனது கையெழுத்தைப் போட்டார். அதற்குக் காரணம் அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை." எனப் பேசியுள்ளார்.