இ.கம்யூ பிரமுகர் நடேச.தமிழார்வன் கொலைக்கு காரணமான ஜாதி-மத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினரும், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளருமான நடேச. தமிழார்வன் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய ஜாதிய-மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் செழியன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வெற்றிவேல் செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களுக்காக தொடர்ச்சியான பல்வேறு போராட்டங்களை நடத்தி அனைத்து பகுதி மக்களுடனும் அனைத்து சாதி மக்களுடன் ஐக்கியமாகவும் செல்வாக்குடனும் தோழமையுடன் இருந்த நடேச தமிழார்வன் கொலையானது திட்டமிட்ட சமூக விரோத கும்பலால் நடைபெற்றதாகவே கருதப்பட வேண்டியுள்ளது. திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஏழை கூலி விவசாயத் தொழிலாளர்கள் அதிகமாக நிறைந்து இருக்கின்றார்கள்.

ஆர்.எஸ்.எஸ். சூழ்ச்சி
பண்ணையார்களின் கொடுமைக்கும் சாதிக் கொடுமைக்கும் முடிவு கட்டியது பொதுவுடமை இயக்கங்கள் தான். மக்களுடைய அடிப்படை பிரச்சினைக்கு பொதுவுடைமை இயக்கங்கள் தான் குரல் கொடுப்பதில் முன்னணியில் இருக்கின்றன. பொதுவுடமை இயக்கங்களை ஒழித்துக் கட்டுவதில் ஆளும் வர்க்கமும் ஆர்எஸ்எஸ்ம் தொடர்ச்சியாக சில ஆண்டுகளாகவே முனைப்பாக வேலை செய்து வருகின்றன.

ஆர்.எஸ்.எஸ்.-பாஜக நிர்வாகிகள் தகராறு
அதன்படியே தாழ்த்தப்பட்ட சாதிகள் இடையேயும் மோதலை உருவாக்கி அதன் மூலமாகவே பொதுவுடமை இயக்கங்களை சிதைப்பதுடன் மக்களிடையே சாதி மத வெறியை தூண்டி பிளவுப்படுத்துகின்ற வேலையும் செய்து வருகின்றனர். தஞ்சை, மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் கார் ஏற்றிக்கொல்லப்பட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் பிஜேபி அமைப்புகள் தகராறு செய்ததையும் அதை போலீஸ் அனுமதித்ததும் குறிப்பிடத்தக்கது.

பாஜகவால் சமூக பதற்றம்
மேலும் சமூக விரோதிகளையும் குற்றப் பின்னணி உள்ளவர்களையும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி அமைப்புகளில் இணைத்து சமூக பதற்றத்தைத் தொடர்ச்சியாக பராமரித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சமுதாய சீர்குலைவு வேலைக்கு தடையாக உள்ள பொதுவுடமை இயக்கத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே சாதிய, மதவாதிகளின் குறிக்கோளாக இருக்கிறது.

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இதன் ஒரு பகுதியாகவே நடேச. தமிழார்வன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. இக்கொலையில் தொடர்புள்ள அனைவரும் உடனே கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இக் கொலையில் தொடர்புடைய நபர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் அனைவரும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். மேலும் டெல்டா மாவட்டங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் சாதிய மதவாத மோதல்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் பொதுவுடமை இயக்கங்கள், ஜனநாயக இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு சாதிய மதவாத அமைப்புகளையும் சமூக விரோதிகளையும் துடைத்தொழிக்க வேண்டும். இவ்வாறு வெற்றிச் செழியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications