"கனவுகளின் தந்தை" தமிழக முதல்வர் ஸ்டாலின்! தாராளமாக புகழ்ந்து கட்டுரை வெளியிட்ட மலையாள பத்திரிக்கை!
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவரது செயல்பாடுகள் குறித்தும் பிரபல மலையாள செய்தி நிறுவனம் ஒன்று கட்டுரை வெளியிட்டுள்ளது.
தமிழக முதல்வராகக் கடந்த மே மாதம் பொறுப்பேற்றது முதல் மு.க. ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றைச் செயல்படுத்தி வருகிறார். மேலும், அவ்வப்போது களத்தில் இறங்கி பொதுமக்களிடையே நேரடியாகளும் உரையாடுகிறார்.
இந்நிலையில், பிரபல மலையாள பத்திரிக்கையான 'தீபிகா' தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பாடுகளைப் புகழ்ந்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மலையாள செய்தித்தாள்
மலையாள பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கம், "தமிழகத்தைப் பொறுத்தவரை சாமான்ய மக்களுடன் நெருக்கமாக இருக்கும் எந்த ஒரு முதலமைச்சரும் அந்த மக்களால் கொண்டாடப்படுகிறார்கள். தங்களது அன்றாட நடவடிக்கை ஒவ்வொன்றிலும், பொதுமக்களுடன் நெருக்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக அவர்களுமே அதற்காக ரொம்பவே மெனக்கிடுகிறார்கள். அதன் காரணமாகத்தான் அவர்களில் பெரும்பாலானோரை மக்கள், தங்களுக்குப் பிடித்த வகையில் விதவிதமான பட்டப்பெயர்களைச் சூட்டி அழைத்தார்கள்.

மு.க. ஸ்டாலின்
அண்ணாதுரை 'அண்ணா' என்றும், 'அறிஞர் அண்ணா' என்றும் அழைக்கப்பட்டார். கருணாநிதி 'கலைஞர்' என்றும் 'தானைத்தலைவர்' என்றும் அழைக்கப்பட்டார். இதே மரபுப்படி, தமிழகத்தின் புதிய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணியின் தலைவரானதிலிருந்து 'தளபதி' என அழைக்கப்பட்டார். ஆனால் அவர் திமுகவின் தலைவரான பின்னர் கட்சியும் மக்களும் அவரை 'தலைவர்' என அழைக்கப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

தமிழகம் நம்பர் 1 என்பதே லட்சியம்
ஒரு பேட்டியில், தான் முதலமைச்சர் அல்ல என்றும், மக்களின் அன்புத் தந்தை என்றும் குறிப்பிட்டிருந்தார் மு.க. ஸ்டாலின். தனது தந்தையைப் போலவே தானும் தமிழக மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் 1 மாநிலமாக உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் கூறியிருந்தார். மக்களுக்கான சேவைகளிலேயே அவர் தனது முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். ஒரு நாளைக்கு 18 முதல் 19 மணி நேரம் வேலை செய்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் நாளிலிருந்தே, மக்கள் சேவையில் அவர் காட்டும் அக்கறையும் அர்ப்பணிப்பும் அவரை 'மக்களின் முதல்வராக' பேச வைத்து உள்ளது.

அமைச்சர்கள் தேர்வு
சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அமைச்சர்கள் தேர்வில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். அவர்களின் கல்வித் தகுதியையும், திறமையையும், அவர்கள் மீதான பொதுமக்களின் கருத்து என்னவாக உள்ளது என்பதையும் அடிப்படையாகக் கொண்டே அவர்களைத் தேர்வு செய்தார். முதலமைச்சராக பதவியேற்றபோது கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கக்கூடிய திறமையான ஒருவர் நிதித்துறைக்கு தேவை என்ற எண்ணத்தில்தான், பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராக தேர்வு செய்தர். அதேபோன்றுதான் சீனியாரிட்டியை கடந்து, தமிழகத்தின் சிறந்த ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்படும் இறையன்புவை தலைமைச் செயலாளராக நியமித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலினின் கனவு
பொருளாதார ஆலோசனைகளைப் பெறுவதற்காக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்லோ, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றை தனக்காக உருவாக்கினார். தொடர்ந்து முதலீட்டாளர்கள் மாநாடு போன்றவற்றை நடத்தி தமிழகத்திற்கு இதுவரை ரூ.17,141 கோடி முதலீடுகளைப் பெற்றுள்ளார். தமிழகத்திற்கு அதிக முதலீடு, அதிக வேலைகள் மற்றும் வருமானம் என்பதே மு.க. ஸ்டாலினின் லட்சியமாக உள்ளது. தமிழகம் சிறப்பான இடத்தை அடைய வேண்டும் என்ற கனவும் அவருக்கு உள்ளது.

மக்களோடு நெருக்கம்
கடந்த தேர்தலுக்கு முன், திமுக அளித்த வாக்குறுதிகளில் மிக முக்கியமானவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுவிட்டன. எரிபொருளின் விலை ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. பால் விலை குறைந்துள்ளது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள்.

களத்தில் முதல்வர் ஸ்டாலின்
இத்தனை பணிகளுக்கு மத்தியிலும், மக்களிடம் நேரடியாகச் செல்வதையும், அவர்களுடன் தொடர்பு கொள்வதையும் அவர் விட்டுவிடவில்லை. அவர்களுக்கு தம்மால் என்னவெல்லாம் செய்திட முடியும் என்பதை அவர்களுக்குப் புரிய வைக்கிறார். கிராம சபைகளில் பங்கேற்பது, காவல் நிலையங்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது, மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்றவையெல்லாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்துள்ளன.
Recommended Video

மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும்
மேலும், அவர் கொண்டு வந்துள்ள 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' மூலம் மக்களின் புகார்கள் முதலமைச்சரின் கவனத்துக்கு நேரடியாக செல்வதால், அவர்களது பிரச்சனைகளை விரைவில் தீர்க்கப்படுகிறது. மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வரும் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கையால் தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் நிச்சயம் உயரும். அத்தகையதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications