கொரோனாவுக்கு நன்றி சொல்லி.. ஆடியிலும் கொண்டாடித் தீர்க்கும் மாழ்பழ ரசிகர்கள்!
சீசன் முடிந்தும் தற்போது மாம்பழங்கள் சந்தைகளில் விற்பனையாகி வருவதால் மாம்பழ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: கொரோனா பாதிப்பால் எல்லோரும் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் சூழலில், மாம்பழ பிரியர்களுக்கு மட்டும் இந்தாண்டு ஜாக்பாட் அடித்துள்ளது.
"மாம்பழமாம் மாம்பழம்.. மல்கோவா மாம்பழம்.. சேலத்து மாம்பழம்.. தித்திக்கும் மாம்பழம்".. என முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு எப்போதுமே தனி மவுசு உள்ளது. மாம்பழ சுவைக்கு மயங்காதவர்களே கிடையாது. நம் வரலாற்றிலேயே மாம்பழங்களுக்கு என தனி இடம் உண்டு.
தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
மக்களிடம் மாம்பழங்களுக்கு என தனி மவுசு இருக்க மற்றொரு காரணம், அவை வருடத்தில் குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே கிடைக்கும் என்பதும் தான். கோடை காலம் வந்து விட்டாலே சூரியன் ஒருபக்கம் கொளுத்தி எடுத்தாலும், மாம்பழம் சந்தைக்கு விற்பனைக்கு வந்து விட்டதா என மக்கள் தேடத் தொடங்கி விடுவார்கள்.
கார்பைட் கற்கள்
மாம்பழங்களை பொறுத்த வரையில் அதன் அசல் சீசன் ஜூன், ஜூலை மாதங்கள் தான். ஆனால் மவுசின் காரணமாக மா மரங்களில் மாங்காய் காய்க்க ஆரம்பித்ததுமே, அதாவது மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே அதனை பறித்து, கார்பைட் உள்ளிட்ட ரசாயன கற்களை வைத்து செயற்கையாக பழுக்க வைத்து, சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள் பல வியாபாரிகள்.
ரெய்டு
இதனாலேயே நம்மூரில் அடி மாதம் தொடங்குவதற்கு முன்னதாகவே சந்தைகளில் மாம்பழங்கள் கிடைப்பது அரிதாகிவிடும். இதனால் கோடையிலேயே மாம்பழங்களை ஆசை தீரத் தின்று தீர்த்துவிட வேண்டும் என பழக்கடைகளுக்கு மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனாலேயே கோடை காலத்தில் அரசு அதிகாரிகள் பழக்கடைகளில் ரெய்டு நடத்துவது வாடிக்கை.
சுவையில் மயக்கம்
மாம்பழத்தின் சுவைக்கு அடிமையானவர்கள், அது கல்லில் பழுக்க வைக்கப்பட்டதா அல்லது இயற்கையாக மரத்தில் பழுத்ததா என்பதை பற்றி எல்லாம் ஆராயாமல், அதை விலைகொடுத்து வாங்கி சாப்பிடத் தொடங்கி விடுவார்கள். இதனாலேயே பல உடல் உபாதைகள் கூட ஏற்படுவதுண்டு. ஆனால் மாம்பழத்தின் சுவையால் அதை எல்லாம் மக்கள் பொருட்படுத்துவதேயில்லை.
ஊரடங்கு
ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆரம்பித்து மே மாதத்தில் உச்சம் தொட்டது. இதனால் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஓரளவுக்கு மாம்பழங்களே சந்தைக்கு வந்தன.
இயற்கையான முறையில்
வாகனப் போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள், கடைகள் திறக்க தடை எனப் பல்வேறு பிரச்சினைகளால், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மாம்பழ அறுவடை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மாம்பழங்கள் இயற்கையான முறையில் மரங்களிலேயே பழுக்கத் தொடங்கின. பல இடங்களில் உள்ளூரில் மட்டுமே மாம்பழங்கள் விற்பனைச் செய்யப்பட்டன.
மாம்பழ அறுவடை
கொரோனா 2வது அலையின் தீவிரம் தற்போது தான் வெகுவாக குறைந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்ப ஆரம்பித்துள்ளது. எனவே மீண்டும் மாம்பழ அறுவடையை வியாபார்கள் தொடங்கியுள்ளனர். இதனால் மரங்களிலேயே பழுத்த அசல் மாம்பழங்கள் சந்தைகளில் கிடைத்து வருகின்றன.
ஆகஸ்டிலும் ஆனந்தம்
இதனால் இம்முறை மாம்பழப் பிரியர்கள் மகிழ்ச்சியுடம் மாம்பழங்களை வாங்கி ருசித்து வருகிறார்கள். பொதுவாக ஜூலை மாத இறுதியில் மாம்பழங்களின் வருகை நின்றுவிடும். ஆனால் இம்முறை ஆகஸ்ட் மாதம் தொடங்கியும் சந்தைகளில் மாம்பழங்கள் கிடைத்து வருகின்றன.
ரகரகமாய் மாம்பழங்கள்
அதுவும் பங்கனபள்ளி, மல்கோவா, நீலம், அல்போன்சா என இயற்கையாக பழுத்த விதவிதமான மாம்பழங்கள் விற்பனையில் இருக்கின்றன. விலையும் மலிவாகவே உள்ளதால் மக்கள் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி ருசித்து வருகின்றன. கடைகளில் மாம்பழங்கள் குவித்து குவித்து விற்பனை செய்யப்படுவதால், கடைவீதியே மஞ்சள் வண்ணத்தில் மிளிர்கிறது.