அது 2014 டேட்டா.. 2021ல் காங்கிரஸ் வாக்கு வங்கியை பாருங்க.. மாணிக்கம் தாகூருக்கு திமுக பதிலடி!
சென்னை: புதுச்சேரியில் திமுக தலைமை எடுக்க கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வரும் சூழலில், காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணியில் 8% வாக்கு வங்கி வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா என்று திமுகவை பார்த்து கேள்வி எழுப்பியுள்ள மாணிக்கம் தாகூருக்கு, 2021 சட்டசபைத் தேர்தல் டேட்டாவை வைத்தே திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சி தாமதம் செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் திமுகவை சீண்டி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் திமுக தனது பணிகளை தொடங்கி இருக்கிறது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மூலமாக புதுச்சேரியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்திருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி திமுகவினர் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், கூட்டணியில் 8 % ஒட்டு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்ல 26% உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்ல என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுடன் 2014 தேர்தலின் போது ஒவ்வொரு கட்சியும் எடுத்த வாக்கு சதவிகிதத்தையும் பகிர்ந்திருந்தார். இதற்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்கு சதவிகிதத்தை விட்டுவிட்டு 2021 சட்டசபைத் தேர்தல் முடிவுகளை பாருங்கள்.. யார் அதிக வாக்குகளை வைத்திருக்கிறார்கள் என்று தெரியும் என்று திமுகவினர் பதில் அளித்துள்ளனர்.
2021 புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்றது. 5 தொகுதிகளில் 2வது இடத்தை பிடித்து, நூலிழையில் வெற்றியை பறிகொடுத்தது. திமுகவின் வாக்கு சதவிகிதம் 18.8ஆக உள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியோ 14 தொகுதிகளில் போட்டியிட்டு 2ல் மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதம் 15.9ஆக உள்ளது.
வாக்கு சதவிகிதத்தை ஒப்பிடும் போது காங்கிரஸ் கட்சியை விடவும் திமுகவே அதிகமாக உள்ளது. இதனால் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க தயாரா என்று மாணிக்கம் தாகூருக்கு திமுகவினர் பதில் அளித்து வருகின்றனர். இதன் மூலமாக தமிழ்நாட்டில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகினால், புதுச்சேரி அரசியலும் கையை விட்டு போகும் சூழல் ஏற்படும் என்று திமுக மறைமுகமாக எச்சரிப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications