“காங்கிரஸுக்கு உரிய மரியாதை கொடுப்பவர்தான்.. தமிழகத்தின் முதல்வராக வர முடியும்” - மாணிக்கம் தாகூர்
சென்னை: எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு, திமுக கூட்டணி கட்சிகள் கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற திட்டமிட்டிருக்கின்றன. குறிப்பாக காங்கிரஸ் இதில் கவனமாக இருக்கிறது. இந்நிலையில், இதனை அழுத்தமாக வலியுறுத்தும் வகையில், "காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை அளிப்பவர்களால் மட்டுமே தமிழ்நாட்டின் முதலமைச்சராக வர முடியும்" என்று நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "காங்கிரசுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால் மட்டுமே முதல்வர் பதவி சாத்தியமாகும். இல்லையென்றால், முன்னாள் முதல்வராகவே திருப்தி அடைய நேரிடும். காங்கிரசுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டால் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பிரச்சாரம் செய்வார்கள். கட்சிக்கு மரியாதை கிடைத்தால் மட்டுமே வெற்றிக்கு அனைவரும் உழைப்போம்" என்று கூறியிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த 7ல் ஒரு தொகுதியை அதிமுக வசப்படுத்தியிருக்கிறது. 1ல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. மற்றபடி 5 தொகுதிகளை திமுகவே வைத்திருக்கிறது. குறிப்பாக விருதுநகர் தொகுதியை திமுக கடந்த இரண்டு தேர்தல்களில் தன் வசம் வைத்திருக்கிறது. இந்த முறை காங்கிரஸ் இதை கேட்டு பெறுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஏனெனில் விருதுநகர் என்பது காமராஜர் பிறந்த ஊர்.
அதற்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், "விருதுநகர் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே. காமராஜரின் பிறந்த இடமாகும். இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமைக்குத் தெரிவிக்கும். ஒவ்வொரு கட்சியும் முடிந்தவரை பல தொகுதிகளில் போட்டியிட விரும்பும், ஆனால் தொகுதி பங்கீடு முடிந்த பின்னரே அனைத்தும் இறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
அமைச்சர்கள், துணை முதல்வர் என ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் குரல்கள் எழுந்துள்ளன. சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜேஷ்குமார், எம்பி விஜய் வசந்த் ஆகியோரை தொடர்ந்து மாணிக்கம் தாகூரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தமது கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தால் கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய அதிகாரப் பங்களிப்பு வழங்கப்படும் என்று வெளிப்படையாக அறிவித்தார். இதனையடுத்து அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் சூடுபிடித்துள்ளன. இதுவரை எந்தக் கட்சியும் விஜயுடன் கூட்டணி வைக்கவில்லை என்றாலும், இந்த கருத்து அரசியல் விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்கள் மாணிக்கம் தாகூரிடம் கேள்விகளை எழுப்பியிருந்தனர். குறிப்பாக 'ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காததால் டெல்லி மற்றும் ஹரியானா தேர்தல்களில் தோல்வியடைந்தது போல், இந்த நிலைமை தமிழகத்திற்கும் பொருந்துமா?' என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டுக்கு காங்கிரஸ் கட்சி மட்டும் பொறுப்பேற்கக் கூடாது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் இந்த பொறுப்பு உள்ளது. மற்றவர்களுக்காக விட்டுக்கொடுப்பது மட்டும் காங்கிரஸ் கட்சியின் பணியாக இருக்க முடியாது.
எந்தக் கட்சியும் காங்கிரசின் வாக்குகளைப் பெற்று, எந்த பிரதிபலனும் இல்லாமல் அமைச்சர் பதவிகளை அனுபவிக்கலாம் என்று நினைக்கக் கூடாது. ஆம் ஆத்மி டெல்லியை இழந்ததோடு மட்டுமல்லாமல், இப்போது அவர்களின் நிலைமையே கேள்விக்குறியாகிவிட்டது" என்று பதிலளித்துள்ளார்.
பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த சச்சரவுகள் தொடரும் என்று கூறிய அவர், "இந்த விவகாரம் இரண்டாம் கட்ட தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றியது. தலைவர்களுடன் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்க்கப்படும்" என்றும் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு உரிய மரியாதை கொடுப்பவர்கள்தான் முதலமைச்சராக நீடிக்க முடியும் என்று மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது, காங்கிரஸ் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications