லாக்டவுனுக்கு பிந்தைய துயர காலம்.. ஒவ்வொரு துறையிலும் விடையே தெரியாத ஓராயிரம் கேள்விகள்
சென்னை: லாக்டவுனுக்குப் பிந்தைய காலத்தில் ஒவ்வொரு துறையிலும் எதிர்கொள்ளப் போகும் துயரம் சொல்லி மாளாதது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் எத்தனை மாதங்கள்/ ஆண்டுகளுக்கு என்ன மாதிரியான பேரிழப்புகளை இந்தியாவின் ஒட்டுமொத்த சமூகமும் எதிர்கொள்ளப் போகிறது என்பதும் புரியாத புதிர்தான்.
லாக்டவுனுக்குப் பிந்தைய காலம் இப்படியாகத்தான் இருக்கப் போகிறது...

1) வெளிநாட்டு ஆர்டர்களை எடுக்கும் கம்பெனிகளில் பணிபுரிந்தவர்கள் எனில் வேலை இழப்பு உறுதி- அடுத்த வேலை தேட வேண்டும் - உதாரணமாக தோல் தொழில்/ காலணி தயாரிப்பு உள்ளிட்ட சார்பு தொழில்களில் ஈடுபட்டவர்களின் எதிர்காலம் என்னவாகும் என தெரியாது?
2) குடிசைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மீண்டும் முதலில் ஆர்டர்களை வாங்க அலைய வேண்டும். அதனடிப்படையில்தான் புதியதாக தொழிலையே தொடங்கித்தான் ஆக வேண்டும். அதற்கான பணத்தைப் புரட்டி தொழில் தொடங்க நிச்சயம் சில மாதங்கள் ஆகும்.
3) சலூன் கடைகள் தொடர்பான அச்சங்கள் அதிகரித்திருக்கிறது. இந்த கடைகள் இயல்பு நிலைக்கு திரும்பவும் சில காலம். அதுவரையில் சலூன் கடைகளில் பணிபுரிகிற தொழிலாளர்களுக்கு வேலை உண்டா? இல்லையா? என தெரியாது.
4) மில்கள் போன்றவற்றில் பணிபுரிந்தவர்களுக்கு லாக்டவுனால் ஊதியம் முழுமையாக கிடைக்கவில்லை. அதனால் மில்கள் முழுமையாக இயங்கும் வரை ஊதியமும் வேலையும் என்னவாகும்? என்கிற அன்றாட உளைச்சல்.
5) 40 நாட்கள் வருவாய் இழப்புக்குப் பின்னர் பொதுமக்கள் பொது போக்குவரத்தை எப்படி பயன்படுத்தப் போகிறர்கள்? அதற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு பதில் மாற்று போக்குவரத்தை நாடினால் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள்/ அதில் பணிபுரிவோர் கண்டக்டர்/ டிரைவர்- கிளீனர் நிலைமை என்னவாகும்?
6) பேப்பர் போடுகிற பணியை செய்தவர்கள் 40 நாட்களாக அந்த பணி இல்லாமல்தான் இருந்தார்கள். ஏற்கனவே பத்திரிகைகள் பெரும் நட்டத்தில் இயங்குகின்றன. ஆட் குறைப்பை செய்திருக்கின்றன. இனி அந்த பத்திரிகை நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தும் 40 நாட்கள் பேப்பரே இல்லாமல் இருந்த நடுத்தர குடும்பத்தினர் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்துமே இந்த தொழிலில் ஈடுபட்டிருப்போர் வாழ்க்கை அடங்கி உள்ளது.
7) மில்களில் கிராமப் புற பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைத்து வந்தது. மூடப்பட்ட மில்கள்/ ஜவுளி சார் தொழில்கள் திறக்கப்பட்டு அவை உடனே இயல்பு நிலைக்கு வந்துவிடும் என சொல்ல முடியாது. அதுவரைக்கும் இந்த கிராமப்புற பெண் தொழிலாளர்கள் வேலை கேள்விக்குறிதான்.
8) கல்வி நிறுவனங்களை எப்படி திறக்கப் போகிறார்கள்? கல்வி கட்டணங்களை எப்படி வசூலிக்க அரசு சொல்லப் போகிறது? இதில் அரசு கெடுபிடி காட்டினால் சொற்ப ஊதியத்துக்கு பணிக்கு சென்ற தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணி இருக்குமா? என்பது சந்தேகம். அங்கேயும் ஆட்குறைப்பு அமலாகலாம்.
9) லாக்டவுனுக்கு பின் கட்டுமானப் பண்கள் மறுநாளே தொடங்கப் போவதும் இல்லை. இந்த பணிகள் தொடங்கும் வரை கட்டுமானத் தொழிலாளர்கள் காத்திருக்க வேண்டும்/ இந்த கட்டுமானத் தொழில்களை நம்பிய டீக்கடைகளும் காத்திருக்க வேண்டும்/ ஹார்வேர்டு கடைகளும் பொறுத்திருக்க வேண்டும்/ அதுவரை இந்த கடைகளில் பணிபுரிகிறவர்களுக்கு வேலை இருக்குமா? என்பது தெரியாது.
10) பொதுமக்களின் ஒவ்வொரு பிரிவினர் கையிலும் பணப்புழக்கம் குறைகிற நிலையில் ஹோட்டல் தொழில் பழைய இயல்பு நிலைக்கு உடனே திரும்புவது கடினம். அதனால் ஹோட்டல் தொழிலாளர்கள் அனைவருக்குமே பழைய பணி கிடைக்குமா? என்பதும் சந்தேகம்.
11) சரக்கு லாரிகளில் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு பணி வாய்ப்பு கிடைக்க மேலும் பல நாட்களாகும். லாக்டவுனே முடிந்தாலும் அவர்களுக்கான லாக்டவுன் காலம் உடனே முடிந்துவிடாது.
12) சினிமா துறை சார்ந்து பல லட்சம் அன்றாட கூலிகள் இருக்கிறார்கள். லாக் டவுன் முடிந்த உடனேயே அனைவரும் ஷூட்டிங் கிளம்பிவிட்டால் இவர்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம். ஆனால் ஷூட்டிங்குகள் உடனே தொடங்குவார்களா? அடுத்த லாக்டவுன் அச்சத்தால் முழுமையாக தொழிலை மேற்கொள்வார்களா? தெரியாது. அதனால் ஏற்கனவே பணிபுரிந்த அத்தனை பேருக்கும் நிறுவனங்கள்/ பட - சீரியல் தயாரிப்பு கம்பெனிகள் வேலை தருமா? என்பதற்கு உத்திரவாதம் இல்லை.
13) துறைமுகங்களில் தேங்கி கிடக்கும் சரக்குகளை திருப்பு அனுப்புதல்/ ஒப்படைத்தல் பணிகளை முதலில் முடித்த பின்னர்தான் புதிய சரக்குகளை அனுப்ப முடியும். லாக்டவுன் முடிந்த உடனேயே அனைத்து துறைமுகங்களும் வழக்கத்துக்கு திரும்பிவிட முடியாது. துறைமுகம் சார்ந்து இருக்கும் கூலித் தொழிலாளர்கள் என்னதான் செய்வார்கள் என்கிற கேள்வி உள்ளது.
14) லாக்டவுன் முடிந்த பின்னர் தங்க வைக்கப்பட்டிருக்கும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்தாலும் வார இறுதியில் ஊதியம் வாங்கிய பின்னர் அவர்கள் இங்கேயே நிலைத்திருப்பார்களா? ஆளைவிட்டால் போதும் என சொற்ப ஊதியத்துடன் சொந்த ஊருக்குப் போவார்களா? அப்படி போகும் நிலையில் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கவும் முடியாமல் இருக்கிற தொழிலாளர்களை வைத்து சமாளிக்கவும் முடியாமல் கட்டுமானம் தொடங்கி பல்வேறு தொழில்கள் முடங்கும்.
15) 40 நாட்களாக தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கின்றன. கொரோனா தவிர்த்த பிற நோயாளர்கள்/ மருத்துவமனைகள தவிர்க்கும் வாழ்க்கை முறைக்கு பழகி இருக்கின்றனர். சிறு சிறு விஷயங்களுக்கும் மருத்துவமனைக்கு போய்க் கொண்டிருந்தவர்கள் கொரோனா அச்சம் காரணமாக இயல்பாக மருத்துவமனைகளுக்கு செல்லும் காலம் திரும்ப சிறிது காலம் ஆகும். அதுவரை தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் கூலித் தொழிலாளர்களின் கதி? வருவாய் கேள்விக்குறி.
இத்தனை கேள்விகளுக்கும் எந்த ஒரு பதிலையும் யாராலும் தந்துவிட முடியாது.












Click it and Unblock the Notifications