மாதங்களில் நான் மார்கழி என்று சொன்ன கண்ணன்... மார்கழி மாதத்திற்கு இத்தனை விஷேசங்களா
மார்கழி மாதம் தேவர்களின் மாதம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியது. அதனால்தான், மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்! என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார்.
சென்னை: மார்கழியில் சூரியன் தனுசு ராசியில் பயணிக்கிறார், தனுர் மாதமாக அழைக்கப்படுகிறது மார்கழி. கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. மார்கழியில் பஜனைகள் களைகட்டும். அதிகாலையிலேயே ஆலயங்கள் திறக்கப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படும். சிவ ஆலயங்களில் திருப்பள்ளி எழுச்சி பூஜையும், பெருமாள் ஆலயங்களில் பகல்பத்து ராப்பத்து விழாக்களும் நடைபெறும். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பகவான் கிருஷ்ணர் பெருமையுடன் கூறியிருக்கும் இந்த மாதத்திற்கு உள்ள சிறப்புகளை பார்க்கலாம்.
ஓராண்டுக் காலம் என்பது தேவர்களுக்கு ஒருநாள் ஆகும். பகல் பொழுது உத்தராயணம் என்றும், இரவுப் பொழுதை தட்க்ஷிணாயணம் என்றும் சொல்வார்கள். உத்தராயணம் தொடங்கும் முன், வருகின்ற மார்கழி மாதமே தேவர்களுக்கு உஷத் காலம். இறைவனை எண்ணி தியானம், ஜபம் செய்ய தேவர்களின் உஷத் காலமான மார்கழி மாதம்தான் மிகவும் உயர்ந்தது.
ஆண்டாள் நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் திருவடித் தொழுது, திருமணம் புரிந்ததும் மார்கழி மாதம் என்னும் சிறப்பு மிக்க மாதத்தில் தான். மார்கழியை பீடை மாதம் என்று தவறாக சொல்வார்கள். பீடு என்றால் பெருமை என்று பொருள். பெருமை நிறைந்த மாதம் என்பதே மருவி பீடை என்றானது.
பல மகத்துவத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது மார்கழி மாதம் அதனால்தான் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!' என்று ஸ்ரீகிருஷ்ணனே கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என்று சொல்கிறார்.
விடியற்காலையில் இருந்தே, ஆலயங்களில் வழிபாடுகள் தொடங்கிவிடும். அதுபோலவே பல ஆலயங்க ளில் திருப்பள்ளி எழுச்சி பூஜை தொடங்கி விடும். பெண்கள் அதிகாலை எழுந்து வாசல் தெளித்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கின்றனர்.
பனிக்காலத்தின் தொடக்க மாதமாக வரும் மார்கழி மாதம் என்றாலே ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். பொதுவாகவே அதிகாலை எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்யமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண்விழிப்பதாகும்.
உஷத்காலம் உஷஸ் என்னும் பெண்தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவளே விடியற்காலை நேரத்திற்கு உரியவள். இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான். இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால்தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது.
மார்கழியில் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படும், மார்கழியில் நீராடி திருப்பாவை, திருவெம்பாவை பாடிக்கொண்டு இறைவனை தரிசித்தால் மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமையும் என்பதும் நம்பிக்கை. தங்களின் எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என பிரார்த்திக்கப்படும் மாதமும் இது தான். மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து தானே ஆண்டாள் அந்த பெருமாளையே மணாளனாகக் கொண்டாள். இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையை உணரலாம்.