1801-ல் வெள்ளையரை குலை நடுங்க வைத்த மருதுபாண்டியரின் வரலாற்று சிறப்புமிக்க நாவலந்தீவு போர் பிரகடனம்
சென்னை.. இன்றைக்கு 219 ஆண்டுகளுக்கு முன்னர்.. இந்த தேசம் ஆங்கிலேயர்களின் கைகளில் இருந்தது..
வட இந்தியாவில் சுதந்திரத்துக்கான கிளர்ச்சி (1857) ஏற்படுவதற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழர் நிலத்தில் புரட்சி வெடித்தது.

அந்த புரட்சிகர வரலாற்றில் மருது பாண்டியர்களும் அவர்தம் நாவலந்தீவு பிரகடனமும் அல்லது ஜம்புதீவு பிரகடனமும் மிக முக்கியமானது. இந்த நாவலந்தீவு பிரகடனம் என்பது ஆங்கிலேயருக்கு எதிரான மருது சகோதரர்களின் பகிரங்க போர் பிரகடனம்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க நாவலந்தீவு பிரகடனத்தை திருச்சி மலைக்கோட்டையிலும் ஶ்ரீரங்கம் கோவிலிலும் ஒட்டி ஆங்கிலேயருக்கான பகிரங்க புரட்சியை முன்னெடுத்தனர்.
கிபி 1801-ல் ஜூன் 10 அல்லது 12-ந் தேதி வெளியிடப்பட்டு ஜூன் 16-ல் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்ட அந்த ஜம்புதீவு- நாவலந்தீவு பிரகடனம் இது:
ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,
மேன்மை தாங்கிய நவாபு முகமது அலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார்.
ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.
உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரை யொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.
இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்;
சோற்றுக்குப் பதில் நீராகாரம்தான் உணவு என்று ஆகிவிட்டது.
இப்படித் துன்பப்படுவது தெரிந்த போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்துகொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.
ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்... ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்.
இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்யவேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும். அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்...
ஆதலால்..... மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த் தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்...
இதை ஏற்றுக் கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது... இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள்.
எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!....
இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்...
எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்...
இப்படிக்கு, மருது பாண்டியன்,
பேரரசர்களின் ஊழியன்,
ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி
இதுதான் நாவலந்தீவு பிரகடனம்!












Click it and Unblock the Notifications