அதிமுகவுக்கு தேவையற்ற வேலை... முதிர்ச்சியற்ற அணுகுமுறை... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாடல்..!
சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இரு மாநில மக்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் வகையில் அதிமுக முதிர்ச்சியற்ற அணுகுமுறையை கொண்டுள்ளதாக சாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
முல்லை பெரியாறு: ஒன்று சேர்ந்து கூட்டாக அறிக்கைவிட்ட ஓபிஎஸ், இபிஎஸ்! ஐந்து மாவட்டங்களில் போராட்டம்
தேவையற்ற வேலை
முல்லைப் பெரியாறு அணையின் வெள்ள நீர் வெளியேற்ற பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேடும் வகையில், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுகஅறிவித்துள்ளது. அதிமுகவின் இத்தகைய அணுகுமுறைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, வருகிற 9 ஆம் தேதி நடத்துவதாக
அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி கருதுகிறது.
142 அடி
முல்லைப் பெரியார் அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டுமென 2014ம் ஆண்டுதீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பின் அடிப்படையில் பலமுறை அணையின் நீர்மட்டம்142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
பருவமழை
ஆனால், கேரளத்தில் கடந்த மூன்றுமாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து,தொடர்ந்து வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது நாடறிந்த உண்மையாகும். இந்த நிலையில்,கேரளத்தில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களிலும் நீரை தேக்கிவைப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இரு மாநில அரசுகள்
இந்த அடிப்படையிலேயே வெள்ள ஆபத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக முல்லைப்பெரியார் அணையில் எந்தளவு நீரை தேக்கி வைக்கலாம் என்பது தொடர்பாக இரு மாநிலஅரசுகளும், இரு மாநிலங்களை சேர்ந்த நீர்வளத்துறை அதிகாரிகளும், ஒன்றிய அரசின் அதிகாரிகளும் அவ்வப்போது கண்காணித்து தேவையான வழிகாட்டுதலையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறார்கள்.
பெரிய இழப்பு
மேலும், சாதாரண காலங்களில்பலமுறை அணையின் நீர்மட்டம்142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். தற்பாது கனமழையின் காரணமாக நீரைதேக்கி வைக்காமல் நிலைமைக்கேற்றால் போல் நீர் வெளியேற்றப்படுகிறது. நீரை தேக்கிவைத்து ஒரேயடியாக வெளியேற்றினால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்பதால் இந்த ஏற்பாடு.
அதிமுக ஆட்சி
ஒரு வேளை உபரி நீரை திறந்து விடாமல் தேக்கி வைத்து, ஒரேயடியாக திறந்துவிட்டால், கடந்த அதிமுக ஆட்சியின் போது 2015ல் சென்னையில் பெய்த பெருமழையின் போது எந்தவொரு முறையான அறிவிப்பையும் செய்யாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னை நகரத்து மக்கள் பெரும்பாதிப்பிற்கு உள்ளானதைப் போன்ற பெரும் ஆபத்து உருவாகவும் வாய்ப்பு உள்ளது
அரசியல் ஆதாயம்
இத்தகைய சூழ்நிலையில், அதிமுக முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், இரண்டு மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் மேற்கண்ட எந்தவொரு அம்சத்தையும் முழுமையாக உள்வாங்காமலும், இரு மாநில மக்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமலும் முல்லைப்பெரியாறு விவகாரத்தை ஒரு அரசியல் பிரச்சனையாக மாற்ற முயற்சிக்கிறது.