தொண்டர்களின் விருப்பப்படி எனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வந்துள்ளார்.. வைகோ சொன்ன விளக்கம்!
சென்னை: ஓயாத கடல் அலைபோல் தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் தனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு எழும்பூரில் உள்ள தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார் அவருடன் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,சமூக நீதியை நிலைநாட்டும் விதமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் ரீதியாக எடுத்த முடிவுக்கு தமிழக மக்கள் வெற்றியை கொடுத்துள்ளார்கள் என்றார்.
முல்லை பெரியாறு: புதிய அணை கட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் திடீர் மனு!
ஓயாத கடலலை முதல்வர்
ஓயாத கடல் அலைபோல் தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும், திராவிட லட்சியங்களை நிறைவேற்ற முதல்வராக முக ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனக் கூறிய வைகோ, 7 பேர் விடுதலையில் காலதாமதம் செய்யும் பாஜக அரசை கண்டிப்பதாகவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் 7 பேர் விடுதலையில் ஆளுநர் காலதாமதம் செய்வது ஏற்கத்தக்கதல்ல என பேசினார்.
பாதகம் செய்யும் பாஜக
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது மீனவர் படுகொலைக்கு ஒன்றிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது எனப் பேசிய வைகோ, பாராளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் கலந்து கொள்ளாமல் முற்றிலும் புறக்கணிக்கிறார் எனவும், தமிழகத்திற்கு எவ்வளவு பாதகம் ஏற்படுத்த முடியுமோ அத்தகைய வேலைகளை ஒன்றிய அரசு செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பிரதமர் வருகை எதிர்ப்பு?
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் எனப் பேசிய மதிமுக பொதுசெயலாளர் வைகோ, தாங்கள் திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ளதாகவும், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து தான் முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் இலங்கை முற்றிலுமாக சீனாவின் பிடியில் உள்ளது எனவும் இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது எனக் கூறிய அவர், பிஜேபிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி கூட்டணி உருவாக வேண்டும் அப்போதுதான் பிஜேபியை வீழ்த்த முடியும் என்றார்.
துரைவைகோவுக்கு பதவி
தொண்டர்களின் விருப்பப்படி ஜனநாயகம் முறைப்படியே தனது மகன் துரைவைகோ அரசியலுக்கு வந்து உள்ளதாக கூறிய அவர், துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர் செய்யக்கூடாது அரசுதான் நியமிக்க வேண்டும் என்பது சரியானது என்றும், சட்டமன்றத்திற்கு மேலவை அமைக்க வேண்டும் என்பதுதான் மதிமுகவின் நிலைப்பாடு என்றார்.
முதல்வர் பதவி
தான் எப்போதும் முதல்வராக ஆக வேண்டும் என்று ஆசைப் பட்டது இல்லை எனக்கூறிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வாழ்நாள் முழுவதும் தமிழர் நலன் உலகத் தமிழர் நலனுக்காக போராட்டம் நடத்தியவன் என்ற பெயரை நிலைநாட்டுவேன் எனவும், சிறைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டால் எனது சுயசரிதை எழுதுவேன் எனவும் கூறினார்.