சுத்தம் செய்வதாக கூறிவிட்டு.. ஷாகா நடத்திய ஆர்எஸ்எஸ்.. அமைச்சர் அன்பில் விளக்கம்.. பாயும் ஆக்சன்!
சென்னை: சமீபத்தில் கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டது.
கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பயிற்சி பெறுவதற்கு காவல்துறையினர் எந்த அனுமதியும் கொடுக்காத நிலையில் இந்த பயிற்சி எப்படி நடந்தது என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

பேரணிக்கு அனுமதி மறுப்பு
தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்துவதற்கு காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதியன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கோரியிருந்தனர். அதே நாளில், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பேரணி நடத்த அனுமதி கோரியிருந்தன. மேலும், ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் இக்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

ஷாகா
பேரணிக்கே இவ்வளவு எதிர்ப்பு இருக்கையில், கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் நேற்று காலை ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கு யார் அனுமதி கொடுத்தது என பல்வேறு அரசியல் கட்சியினரும் கேள்வியெழுப்பியிருந்தனர். அரசு பள்ளியில் இதுபோன்ற தனியார் அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு அனுமதியளிக்க கூடாது என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

போராட்டம்
ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மறுத்தனர். தாங்கள் பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியைதான் மேற்கொண்டிருந்ததாகவும், இந்த பணியை தொண்டர்கள் மேற்கொண்டிருந்ததை திரித்து 'ஷாகா' நடத்துவதாக பழிசுமத்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் விளக்கமளித்திருந்தனர். இதனையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கையை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர்.

விளக்கம்
இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் பயிற்சி மேற்கொண்டவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் இது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், "பள்ளியை சுத்தம் செய்வதாக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டு, முன்னறிவிப்பின்றி, பயிற்சி நடத்தியிருக்கின்றனர்" என்று விளக்கமளித்துள்ளார்.
மேலும், "பள்ளி வளாகங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உட்பட எந்த அரசியல் அமைப்பினருக்கும் பள்ளி வளாகங்களில் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. கோவை பள்ளியில் பயிற்சி மேற்கொண்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications